![](pmdr0.gif)
"தனித்தமிழ் மாட்சி"
மறைமலை அடிகள்
tanit tamiz mAtci
of maRaimalai aTikaL
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our sincere thanks go to Mr. Murugavel of Bangalore and Mr. Anandhakumar Krishnan of Coimbatore
for their help in the preparation of this etext.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2014.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
"தனித்தமிழ் மாட்சி"
மறைமலை அடிகள்
-
source:
"தனித்தமிழ் மாட்சி"
மறைமலை அடிகள்
மணிவாசகர் பதிப்பகம் ; 2004 .
வாழ்க்கை வரலாறு
மின்பதிப்பு தயாரிப்பு: ஆனந்தகுமார் கிருஷ்ணன்
----------
தனித் தமிழ் மாட்சி இந்தி பொது மொழியா 05
by மறைமலை அடிகள் .
பூங்கொடி பதிப்பகம் மயிலாப்பூர் சென்னை-4 ; 2008
thanith thamizh maatsi inthi pothu mozhiyaa 05
by maraimalai atikal .
--------------------
மறைமலை அகைளாரின் வாழ்க்கைக் குறிப்புகள்
15.07.1876 | மறைமலையடிகளார் தோற்றம் |
தந்தை, தாய் | சொக்கநாதர், சின்னம்மை |
1893 | சவுந்தரவல்லியை மணம் முடித்தல் |
1895 நவம்பர் | பேரா. சுந்தரம்பிள்ளை அறிமுகம் |
1897 | சோமசுந்தர நாயகர் விருப்புக்கிணங்கித் “துகளறு போதம்“ நூற் செய்யுள்கட்கு உரை எழுதுதல். |
9/3/1898 | சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் ஆதல். |
19/4/1900 | அடிகள் இல்லத்திற்கு ஆறுமுக நாவலர் வருகை. |
1903 | ‘அறிவுக்கடல்‘ முதல் மலர் வெளியிடுதல். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை உருவாதல். |
18/05/1905 | திருப்பாதிரிப்புலியூரில் ஞானியாரைக் காணல். |
7/7/1905 | வ.உ.சி. சந்திப்பு |
திசம்பர் 1906 | சிதம்பரம் சமாசம் முதலாண்டு விழா. |
10/4/1911 | கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியர் வேலையை விடுதல். |
1/5/1911 | பல்லாவரம் மாளிகையில் குடியேறல். |
27/8/1911 | துறவியாதல் |
7/1/1913 | “தமிழர் நாகரிகம“ உரை நிகழ்த்துதல். |
10/1/1914 | கொழும்பு நகரில் முதல் பொழிவு |
1916 | தனித்தமிழ் உணர்வு மலர்தல், பல்லாவர மாளிகையில் பதிப்பகம் நிறுவுதல் |
23/5/1917 | கொழும்பில் வரவேற்பு |
14/1/1922 | யாழ்ப்பாணத்தில் “பழந்தமிழர் நாகரிகம்“ பற்றிய பொழிவு |
31/12/1925 | சைவ சித்தாந்த மகா சமாசத்தின் 20-ஆம் ஆண்டு விழா. |
1925 | பலி விலக்கு இயக்கம் “சிறு தேவதைகட்கு உயிர்ப் பலியிடலாமா?“ |
1930 | மறைமலையடிகள் கல்விக்கழகம் நிறுவியது. ஆலந்தூர் – இளவழகனார். |
4/10/1937 | சென்னை கோகலே மண்டபம் “இந்தி எதிர்ப்பு மாநாடு“ தலைமை. |
19/10/1940 | சென்னை பச்சையப்பன் மண்டபம் அனைத்து இந்தியத்தமிழர் மத மாநாடு ‘தமிழர் மதம்‘. |
15/9/1950 | வெள்ளி. பிற்பகல் 3.30 அடிகளார் மறைவு |
24/8/1958 | மறைமலையடிகளார் நூலகம் அமைதல். |
1976 | அடிகளார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள். |
உள்ளுரை
1 | தனித்தமிழ் மாட்சி |
2. | தமிழில் பிறமொழிக் கலப்பு |
3. | தமிழ்த்தாய் |
4. | பகுத்துணர்வும் மாதரும் |
5. | கல்வியுங் கைத்தொழிலும் |
6. | கல்வியே அழியாச் செல்வம் |
7. | அறிவுநூற் கல்வி |
8 | உற்றுநோக்கி யாராய்தல் |
9. | கல்வியும் ஓய்வும் |
1. தனித்தமிழ் மாட்சி
இன்னுந் தமிழிற் பிறமொழிச் சொற்களை ஏற்றி அதனை மாசுபடுத்தி யழிப்பதுதான் அதனை வளர்ப்பதாகும் என்று எழுதுவோர், தூய தனித்தமிழ் எழுதுவாரைக் “குறுகிய மனநிலை“ “அறியாமை“, “பேதமை“ யுடையரென இகழ்ந்துபேசி விடுகின்றனர். கொள்கையளவில் ஒருவரோடு ஒருவர் மற்ற்றொருவர் மாறுபட்டிருப்பது பற்றி, அவர மற்றவரைக் “குறுகிய மனநிலையுடையவர்“ எனவும், “அறியாமை“, “பேதமை“ மிக்கவர் எனவும் இகழ்ந்து பேசுதல் அறிவுடையோர்க்கு முறையாகாது என்பதை மட்டும் வற்புறுத்துகின்றோம். தாங்கொண்ட கொள்கையே உண்மையானது என்று ஒவ்வொருவருந் துணிந்துரைத்தல் ஆகாது. மக்கள் எல்லாருஞ் சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையர். ஒருவர் ஒருகாலத்து அறிவெனக் கொண்டது பிறிதொரு காலத்து அறியாமையாக மாறுதலும் உடைத்து. இதனைத் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும் “அறிதோ ற்றியாமை கண்டற்றால்“ என நன்கு தெருட்டியிருக்கின்றனர். இத்தகைய நிலையில் உள்ள மக்கள் ஒருவரை யொருவர் “அறியாமையுடையர்“ என்று இகழ்ந்து பேசுவதினுந் தகாத்து யாது உளது! தாந்தாம் உண்மை யெனக் கண்டவைகளைத் தக்க சான்றுகள் கொண்டு விளக்கிப்போதலே அறிவுடையார்க்குக் கடனாவதாம்; தமக்கு மாறான கொள்கை யுடையாரை இகழ்ந்து பேசுதல் அவர் தமக்குச் சிறிதும் முறையன்றாம். அது நிற்க.
இனி, நமது செந்தமிழ்மொழ்யில் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கலவாமல. நம்மாற் கூடியவரையில் முயன்று அதனைத் தூயதாக வழங்கல் வேண்டும். ஆனால். ஒருசாரர், உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் மாறுந் தன்மையவாகலின், அவற்றுள் ஒன்றாகிய மொழியும் மாறுதல் அடைதல் இயற்கையேயாம் என்றும், அதனால் நன்றேயாமென்றும் வரைந்த்ருக்கின்றார். இனி ‘மாறுதல்‘ என்னுஞ் சொல்லால் உணர்த்தப்படும் பொருள் என்னை? ஒன்று தன் றன்மை திரிந்து மற்றொடு கலக்கப்பெற்றுத் தன்நிலை குலைதலா? அல்லது தன்னிலைக்கு ஏற்றவாறு பிறவற்றின் உதவியால் தானே வரவர வளர்ந்து திரிபுறுதலா? எனின் இம்மூன்றும் அம்மாறுதல் என்னுஞ் சொல்லுக்குப் பொருளேயாம்.
முதலிற் சொன்ன பொருளின் படி, தவளையினத்திற் சேர்ந்த சில சிற்றுயிர்களும் பட்டுப்பூச்சி முதலியனவும் முதலில் ஒரவகை யுருவத்திலிருந்து, பிறகு அவ்வுருவு முழுதுந் திரிந்து தவளையாகவும் பட்டுப் பூச்சி முதலியனவாகவும் மாறுகின்றன; இரண்டாவது சொன்ன பொருளின்படி, மக்கள் முதலான எத்தகைய உயிர்களுந் தம்முடம்பின் இயல்புக்கு ஏலாத நோய்ப் புழுக்களோடும் பாம்பின் நஞ்சையொத்த நச்சுப் பொருள்களோடுங் கலக்கப் பெறுமானால் தம்முட்ம்பின் நலை குறைந்து மாறி விரைவில் அழிந்துபோகின்றன; இனி, மூன்றாவது சொன்ன பொருளின்படி, உலகத்தில்ல உள்ள எல்லா உயிர்களுந் தத்தம் நிலைக்கு ஒத்த பொருள்களின் சேர்க்கையால் தமது நிலை கெடாமலே வளர்ந்து திரிபெய்தி வருகின்றன. மக்கள் தமக்கேற்ற உணவுகளை உட்கொண்டும. இசைவான இடங்களிற் குடியிருந்தும், வரவரத் தம்முடம்பும் உணர்வும் மாறிமாறி வளர்ந்து வருகின்றனர் மக்கள் அல்லாத மற்றை உயிர்களில் நிலையியற் பொருள்களாகிய புல் மரஞ் செடி கொடி முதலியனவும், இயங்கியற் பொருள்களிற் புழு முதல் யாடு மாடு முதலான எல்லா வுயிர்களுந் தத்தமக்கேற்ற உணவுப் கொருள்களை உட்கொண்டு த்த்தமக்கு இசைவான இடங்களிலிருந்து நாடோறும் மாறுதல எய்தி வளர்ந்து வருகின்றன. இம் மூவகைப் பட்ட மாறுதல்களில் எத்தகைய மாறுதலை எல்லா உயிர்களும் விரும்புகின்றன வென்று உற்றுநோக்கின், தம் இயல்புக்கு ஒத்தவற்றின் சேர்க்கையால் தமது தன்மைகெடாமல் வரவரப் பெருக்கமுற்று மாறிமாறி வளர்ந்து வருதலையே அவையெல்லாம் அல்லும் பகலும் விழைந்து வருகின்றனவென்பது எல்லார்க்கும் புலனாம், தமக்கு ஏலாத பொருள்களோடு கலந்து தமது நிலைகுலைந்து மாறி மாய்தலை எவ்வகைப்பட்ட உயிரும் விரும்புவ தில்லை; தமக்கு இடர்தரும் இடத்தையேனும் பொருளையேனுங் கண்டால் அவற்றை அகன்றுபோய்ப் பிழைக்கும் முயற்சியைப் புழு முதல் மக்கள் ஈறான எல்லா உயிர்களும் மிகவும் பரபரப்பொடு நிரம்பக் கருத்தாய்ச் செய்தல் எவரும் உணர்ந்த்தேயாம். இடம் விட்டுப் பெயராத புல்மரம் முதலியனவுங் கூடத் தத்தமக்கேற்ற உணவுகளை உட்கொள்ளும் வரையில் உயிரோ டிருத்தலும், அங்ஙனம் அமையாக்கால் அவை பட்டுப்போதலும் எல்லாருட் அறிவர்.
ஆகவே உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் எல்லா உயிர்களும் மாறுதல் அடைதலாகிய பொது நிகழ்ச்சியைப்பார்த்து, அப்பொதுவகையான மாறுதலுள் எத்தகைய மாறுதல் மக்களால் வேண்டப்படுவது என்பதனை உணர்ந்துபாராமல், தம் நிலைகுலைந்து மாறுதலாகிய வேண்டாத தொன்றைக் கடைபியைய் பிடித்துக் கொண்டு, அதன்பை நமது அருமைச் செந்தமிழ்மொழியுந் தனது தூயநிலை குலைந்து மாறுதல் அடையவேண்டுமென்று உரைப்பது அறிவுடையோரால் ஏற்றுக்கோடற்பாலதாமோ? எல்லாப்பொருள்களும் எல்லா உலகமும் ஒரு காலத்து மாறி மாய்தல் உண்மையேயாயினும், அம் மாறுதலும் அதனால் வரும் அழிவும் இப்போதே வந்துவிடல் வேண்டுமென்று எவரேனும் விரும்புவரா? அங்ஙனம் எவரேனும் விரும்புவராயின் அவரை அறிவு திரிபெய்திய வெறியர் என்றே உலகங் கொள்ளுமல்லது, மற்று அவரை அஃது உயர்த்துக் கூறுமோ? ஆண்டில் முதிர்ந்திருவர்களுந் கூடத் தமது உடம்பின் நலம் பழுதுபதாதவாறு அறிவான முறைகளைக் கையாண்டு மேலும்மேலும் அதனை நலமுறைவைத்து வாழ்நாளைப் பெருக்கதற்கன்றோ முயல்கின்றனர்? நலமுடனிருந்து வாழ்நாளைப் பெருகச் செய்பவரக்ளுக்கு அறிவு வளர்ச்சியும் அதனாற் பேரின்ப்ப் பேறும் வாய்த்தலால், உடம்பை விரைவில் நிலைகுலையச் செய்பவர்பகளுக்கு அறிவும் இன்பமும் வாயா.
இது போலவே, நமது செந்தமிழ்மொழியாகிய ஒலியுடம்பும் பழுதுபடாமற் செவ்வையாகப் பாதுகாக்கப் படுமானால் அஃது இன்னும் பலநூறாயிரம் ஆண்டு உயிரோடு உலவித், தன்னைப் போற்றி வழங்கும் மக்களுக்கு அரிய பல நலங்களையும் நன்கு பயக்கும், சிலருடம்பு தமக்கு அரிய பல நலங்களையும் நன்கு பயக்கும். சிலருடம்பு தமக்கு இயற்கையிலேயுள்ள குறைபாட்டானுந், தம்மையுடையவர்களால் நன்கு பேணப்படாமையானும் விரைவில் அழிந்துபோதல் போலச், சமஸ்கிருதம் இலத்தீன் கிரீக் ஈபுரு முதலான பழைய மொழிகளுந் தமக்கு இயல்பாகவுள்ள குறைபாட்டானுந் தம்மை வழங்கியியோர் நாகரிகம அற்றவராய் இருந்தமையானும் வழங்குதல் அற்றன. நமது செந்தமிழ்மொழியோ தன்னை வழங்கிவரும் நாகரிக நன்மக்களின் அறவுமுயற்சியாற் பெரிது போற்றப்பட்டு வருதலானுந் தனது இளமைத் தன்மை குன்றாது இன்னும் உலவி வருகின்றது. சிலர் இளமையிலேயே மூத்துப் போதலையும் வேறு சிலர முதுமையிலும் அது தோன்றாமற் புத்திளமையோடுங் கட்டழகோடும் விளங்குதலையும் நீங்கள் பார்த்த்தில்லையா? பாதுகாப்பினால் இளமையும் வாழ்நாளும் இவ்வாறு நீண்டுவருவதல் போலவே, நமது தனித்தமிழையுந் தூயதாக வைத்துப் பாதுகாப்போமாயின் அது மக்கள் உள்ள்ளவும் இறவாது நடைபெறுதல் திண்ணமன்றோ? எனவே, தமிழ்மொழியின் வளவிய வளர்ச்சிக்கு ஏதுவாகிய மாறுதலே எல்லாரும் விரும்பத்தக்கதா மன்றி, அதுகுன்றி மாய்தற்கு ஏதுவான மாறுதல் அறிவுடையார் எவரானும் எக்காலத்தும் விரும்பற்பாலதன்று.
இனித், தமிழ்வளர்ச்சிக்கு மாறான மாறுதல் என்னென்றால், தூய தமிழ்சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்து அயன்மொழிச்சொற்களை அதன்கட் கொண்டு வந்து புகுத்தலேயாம். ஓர் உடம்பின் உள்ளும் புறம்பும் உள்ள உறுப்புகள் எல்லாவற்றின் தொகுதியே அவ்வுடத்பாதல்போல, ஒரு மொழியில் உள்ள அதன் எல்லாச் சொற்களின் தொகுதியே அம்மொழியாகும். கூனுங் குறளும் ஊமுஞ் செவிடுஞ் சிதடும் உறுப்பறையுமாய்ச் சில உடம்புகள் இயற்கையிலே பழுதுபட்டிருத்தல் போலவும், அங்ஙனம் பழுதுபட்ட உடம்புகள் அக்குறைபாட்டை நீக்கிக்கொள்ளும்பொருட்டுக் கோலுங் குறடும் எழுத்தும் போலி கை கால்களுஞ் செயற்கையாகச் செய்து அமைத்துக்கொள்ளுதல் போலவும், இயற்கையிலேயே குறைபாடு உடைய ஆங்கிலம் மலையாளம் கன்னடம் தெலுங்கு வங்காளி இந்தி முதலான மொழிகளேமற்றை மொழிச் சொற்களின் உதவியைப் பெரிதும் வேண்டிநிற்கின்றன. மற்று எல்லா நிறைவும் உடைய தமிழ்மொழிக்கோ அங்ஙனம் பிறமொழிச் சொற்களின் உதவி சிறிதும் வேண்டப்படுவதில்லை.
மக்கள் இம்மை மறுமை பற்றி அறிய வேண்டுவனவெல்லாம் முற்றும் எடுத்துக்கூறுந் ‘தொல்காப்பியம்‘ ‘திருக்குறள்‘ என்னும் நூல்கள் இரண்டுந் தூய தனித்தமிழ்ச் சொற்களால் ஆக்கப்பட்டிருத்தலே யாம் கூறும் இவ் வுண்மைக்குச் சான்றாம். இங்ஙனந் தன் இயற்கைச் சொற்களால் அமைந்த்தாகிய தமிழிற் பிறமொழிச் சொற்களைப் புகுத்துதல் எதுபோலிருக்கின்ற தென்றால், உள்ள உறுப்புகளை வெட்டி எறிந்விட்டு, வேறு மண்ணாலும் மரத்தாலும் செயற்கையாக அவ்வுறுப்புகள்போற் செய்து அவற்றை அதன்கண ஒட்ட வைத்துப் பார்த்தலுக்கே ஒப்பாயிருக்கின்றது. மயிர் குஞ்சி கூந்தல் முதலிய தமிழ்ச்சொற்களை விடுத்து ‘ரோமம்‘ ‘சிகை‘ என்னும் வடசொற்களையும், உடம்பு தலை சென்னி முகம் முதலியவற்றை நீக்கிச் ‘சரீரம்‘ ‘சிரசு‘ ‘வதனம்‘ என்பவற்றையுங், கண் காது செவி மூக்கு என்பவற்றுக்கு ‘நயனம்‘ ‘கர்ணம்‘ ‘நாசி‘ என்பவற்றையும், மிடறு கழுத்து என்பவற்றுக்கு மாறாகக் ‘கண்டம்‘ என்னுஞ் சொல்லையுந் தோள் கை முதலியன இருக்கப் ‘புஜம்‘ ‘கரம்‘ என்பவற்றையும், வயிறு அகடு இருக்க ‘உதரம்‘ ‘குஷி‘ என்பவைகளையும், கால் அடி என்னுஞ்சொற்களுக்குப் ‘பதம்‘ ‘பாதம்‘ என்பவற்றையுங், கொண்டுவந்து நுழைத்தல், அவ்வத் தமிழ்ற் சொற்களாகிய உறுப்புகளை வெட்டியெறிந்துவிட்டு, அவை போன்ற ஏனை மொழிச்சொற்களைக் கொணர்ந்து அத்தமிழ் உடம்பின்கண் ஒட்டவிடுதலையே போல்கின்றதன்றோ? பொருள்களை ‘வஸ்துகள்‘ என்று சொல்வது எற்றுக்கு? ஒளியைப் ‘பிரகாச‘ மென்றும், ஓசையைச் ‘சப்தம்‘ என்றுஞ் சுவையை ‘ருசி‘ என்றும், மணத்தை ‘வாசநை‘ என்றுந், திதித்திப்பு இனிப்பை ‘மதுரம்‘ என்றுந். தண்ணீர் சோறு உணவு என்பவற்றை ‘ஜலம்‘ ‘அந்நம்‘ ‘ஆகாரம்‘ என்றும், ஆடையை ‘வஸ்திரம்‘ என்றுங், கட்டாயம் என்பதை ‘அவஸ்யம்‘ எனறுந், தாய் தந்தை மகன் மகள் உறவினரை ‘மாதா‘ ‘பிதா‘ ‘புத்ரன்‘ ‘புத்ரி‘ ‘பந்துக்கள்‘எனறுந், துன்பம் கேடு குடும்பம் என்பவைகளைக் ‘கஷ்டம்‘ ‘நஷ்டம்‘ ‘சம்ஸாரம்‘எனறுந், தலைமுழுக்கு வழிபாடு இளைப்பு தூக்கம் முதலியவைகளை ‘ஸ்நாநம்‘ ‘பூஜை‘ ‘ஆயாசம்‘ ‘நித்திரை‘ என்றும், நினைத்தல் எண்ணல் சொல்லுதல் என்பவற்றை ‘ஞாபகம்‘ ‘பாவநை‘ ‘வசனித்தல்‘எனறுந், தூய தமிழ்ச்சொற்களை ஒழித்து வடமொழிச் சொற்களைக் கொண்டுவந்து புகுத்தித் தனித்தமிழ்ச் சொற்களை வழங்காமல் தொலைப்பதுதானா நமது அருமைச் செந்தமிழ்மொழியை வளர்த்தல? அறிவுடையீர் கூறுமின்கள்!
இன்னும் இங்ஙனமே எத்தனையோ ஆயிரஞ் சொற்களை வடமொழி முதலான பிறமொழிகளினின்றுங் கொண்டு வந்து, அவற்றைத் தமிழிற் புகுத்தி, அதன் தூய தனிச் சொற்கள் ஒவ்வொன்றாக வழக்கு வீழ்ந்து போகுமாறு செய்வதுதானா தமிழையும் பிறமொழிகளையுங் கற்றவர் அதற்குச் செய்யும் உதவி? தான் பிடித்த்தை எப்படியாவது நிலைநாட்டிவிட வேண்டுமென்று முன்வந்து தமிழ் மொழியைத் தொலைக்க வழிதேடுவதுதானா தமிழ்கற்று அதனாற் பிழைப்பவர் அதற்குச் செய்யும் நன்மை? தமிழையும் பிறமொழியையுங் கற்க்கற்கத் தமிழ்மொழிச் சொற்கள் இவை அயல்மொழிச் சொற்கள் இவையென்று நன்குணர்ந்து தமிழில் ஏனையவற்றைக் கலவாமற்பேசுதல் எழுதுதலும், தமிழில் முன்னமே வழக்குவீழ்ந்த சொற்களையுந் திரும்ப எடுத்து வழங்கவிடுதலும் அல்லவோ கற்றவர் அம்மொழியைப் பாதுகாத்து வளர்த்தற்குச் செய்யும் நன்முறையாகும்!
ஆங்கிலத்தில் வல்ல நல்லிசைப் புலவர்களான ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி? டெனிசன் முதலியோர் தம்மால் ஆனமட்டும் முயன்று அயல்மொழிச்சொற்கள் விரவாத தூய ஆங்கிலநடையிற் பல்லாயிரம் இனிய பாக்கள் பாடியிருப்பதாக அவர்களை ஆங்கில நன்மக்கள் எவ்வளவு புகழ்ந்து பேசுகின்றார்கள்! பிற்காலத்திருந்த டெனிசன் தமதுகாலத்தில் வழங்காது மறைந்த தூய ஆங்கிலச் சொற்களையும் மீண்டும் எடுத்து வழங்கி அவற்றை வழங்கவிட்டமைக்காக, அவர் சுற்ற்றவுடைய ஆங்கில நன்மக்களால் எவ்வளவு பாராட்டப்படுகின்றார்! ஜான்சன், கிப்பன் என்னும் உரைநூற் புலவர்கள் மற்றைத் துறைகளிற் சிறந்தவர்களாயிருந்தும், அவர்கள் இலத்தீன், கிரீக் முதலான அயன்மொழிச் சொற்களை மிகுதியாய் எடுத்துத், தம் உரை நூல்களில் விரவைத் தெழுதினமைக்காக அவர்களை அந் நனமக்கள் இன்னுங் குறைத்துப் பேசுதல் ஆங்கிலநூலுரை வரலாறு கற்பார் எவரும் நன்கு உணர்வரன்றோ?
ஆங்கிலமொழியில் இலக்கண நூற் புலவராய் விளங்கிய மிக்கிள்ஜான் என்னும் ஆசிரியர், “பழைய நாளில் ஆங்கிலமக்கள் நாகரிகம் அற்றவராய் இருந்தமையானே பலமொழிபேசும் பல்வகைநாட்டாரும் அவரமேற் படையெடுத்து வந்து அவர்தம் நாடு நகரங்களைக் கைப்பற்றிக் கொண்டு அவரொடு நெடுக்க கலந்துவந்தனர்“ எனவும், “அதனாற் பலமொழிச் சொற்களும் வெற்றியாளராய் நிலைபெற்ற அப் பலர் வாயிலாக நீக்கமுடியாதவாறு ஆங்கிலமொழியிற் கலந்து நிலைபெறலாயின“ எனவும் “ மொழிக்கலப்பின் வரலாற்றை எடுத்துக் காட்டியபின், “பதினெட்டாம் நூற்றாண்டில், இலத்தீன் மொழிச்சொற்களை மிக்க் கலந்தெழுதும் நடை புது வழக்கமாய் வந்துவிட்டது. ‘உரோம் அரசியலின் இறக்க்முஞ் சிதைவும‘ என்ற நூலை எழுதிய கிப்பன் என்பவரும், அந் நூற்றாண்டிற் சிறந்த ஆங்கிலச் சொற்பொருள் எழுதிய ஜான்சன் என்பவரும் இலத்தீன் மொழிச்சொற்களை நிரம்பவும் மிகுதியாய் எடுத்துக் கையாண்டனர், கிப்பன் நூற்றுக்கு முப்பது சொல் விழுக்காடும், ஜான்சன் இருபதெட்டு விழுக்காடுமாக அயன் மொழிச் சொற்களை விரவ்விட்டனர். ஆனால், உள்ளுர் நிகழ்ச்சிகளைப் பற்றிக் கலப்பில்லாமல் எழுதிய புலவர்களிடத்தும் அவர்கள் இயற்றிய நூல்களிடத்தும் நாம் வரும்போது, இலத்தீன் மொழிச்சொற்கள் மிக மிகக் குறைவாக இருத்தலைக் காண்கின்றோம். ஜான் முனிவரது நூலின் மொழிப் பெயர்ப்பில், நூற்றுக்கு நான்கு இலத்தீன் சொற்களே காணப்படுகின்றன; அதில் இன்னும் பலவிடங்களில் இலத்தீன மொழிச்சொற்கள் ஒன்று கூட இல்லாத பாக்கள் பலவற்றை நிரைநிரையாய் எடுத்துக்காட்டலாம்“ என்று கூறிப் பின்னும் “பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இச் சொற்களைத் தொகுதியாய்க் கொண்டு வந்து நுழைக்கும் நோக்கம் வலுப்பட்டது. அங்ஙனமே அவை உரிய இடங்கள் முன்னமே நிரப்பப்பட்ட்டையுந், தாம் வேலை செய்தற்கு வாய்த்த பொழுதுகள் முன்னறிந்து நிறுத்தப்பட்டமையுங் கண்டவுடனே அவை வந்தபடியே திரும்பிவிடலாயின. அதுமுதல் அவை பின்னர்க் கேட்கப்படவே இல்லை. குருமுதல்வரான ஜெரிமிடெய்லர் Sportiveness என்னும் ஆங்கிலமொழிக்கு மாறாக ludibundness என்னும் இலத்தீன் மொழியையும், mental blindness என்பதற்கு மாறாக clancular என்னுஞ் சொல்லையும், cruelty என்பதற்கு மாறாக ferity என்னுஞ் சொல்லையும், lady’s maid என்பதற்கு வேறாக paranymph என்னுஞ் சொல்லையுங் கொணர்நது வழங்கினார். ஏளனஞ் செய்யத்தக்க அளவாக இத்தகையநடை பெருகி வரவே, இத் தன்மையவான சொற்களை வழங்குதலில் உண்மையான பயன் இல்லையென்பது ஆங்கிலமக்களின் நல்லறிவுக்குப் புலப்படலாயிற்று; புலப்படவே அவை அமைதியுடன் கைவிடப்பட்டன. ஆங்கிலங் கற்கும் இந்துவோ பெருந் தொகையான இலத்தீன் சொற்களைப் பயன்படுத்துதற்கு எப்போதும் பெருவிருப்புடையனாய் இருக்கின்றான்.“ என்று எழுதி, அதன்பின் ஓர் இந்து மாணவன் ஆங்கிலத்தில் ஆக்கிய ஒரு நாலடிச் செய்யுளை எடுத்துக்காட்டி “ஆங்கில மகன் எவனும் அவ்வளவு மிகுதியான இலத்தீன் மொழிகளைச் சேர்த்து ஒருநடை எழுதமாட்டான்“ என்று அதன பிழைகளை எடுத்துக் கூறிச், “சொற்களைச் செவ்வையாக வழங்கும் முறை இன்னதென்று உணரவும் அறியவும் வேண்டும அயலான் ஒருவன் அச் சொற்கள் வழங்கும நாடுகளிற் போய்ச் சிலகாலம் அங்கே தங்கியிருக்கவேண்டும்“ என்றும், “நன்கு கற்றவர்கள் அயன்மொழிச் சொற்கள் விரவிய இத்தகைய ஆங்கில நடையைத் தங்களாற் கூடிய மட்டும் விலக்குகின்றார்கள்“ என்றுங். “கோல்ட்சிமித், ஜேன், ஸ்டீபன்சன் முதலானோரை ஒத்த புலவர்களின் நூல்களைப் பயின்று அவற்றின் சுவையை நுகரும் எந்த இளைஞனும் உரியகாலத்தே நல்ல தூய ஆங்கிலநடை எழுதுந் திறத்தைத் தானே திண்ணமாய்ப் பெறுவன்“ என்றும் முடித்துக் கூறுகின்றனர்; (Prof. J.M.D. Meikle John’s The Art of Writing English. ப்ப. 121 132).
இந்நல்லிசைப்புலவர் கருத்துக்கு ஒப்பவே, வரலாற்று நூற் புலமையில் நிகரற்று விளங்கிய ஆங்கில ஆசிரியரான பிரமீன் என்பவரும் “வேண்டப்படாத பிரஞ்சு இலத்தீன் மொழிச்சொற்கள் உரைநடையை உயிர்வுபடுத்துகின்றன வென்று பிழையாக கதப்படுகின்றனவே யல்லாமல், உண்மையில் அவை பொருட்குழப்பத்தையே மேலுக்கு மேல் உண்டுபண்ணுகின்றன; ஆதலால், அவைகளுக்கு மாறாகப் பொருட்டெளிவுள்ள வெளிப்படையான ஆங்கிலச் சொற்களையே ஒவ்வொரு பக்கத்திலும் வைத்து எழுதுவது எளிதெனக் கண்டிருக்கின்றேன். பதினான்கு அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன் யான் எழுதியதை விட இப்போது யான் தெளிவான தூய ஆங்கில நடை எழுதக்கூடுமென யான் கண்டுகொண்டமை எனக்கு எவ்வாற்றானும் வெட்கமாயில்லை; நடையெழுதப் பழகும் இளைஞரைத் தேற்றல் வேண்டி இவ் வுண்மையைச் சொல்வது நல்லதென எண்ணுகின்றேன். நடையெழுதக் துவங்குவோர் தாம் உயர்நடை யெழுதுவதாக எண்ணிக்கொண்டு எழுதவதில் மயக்கம் உடையராகின்றார்கள். உண்மையான ஆற்றலுக்கும், எல்லாவற்றையும் விட உண்மையான தெளிவுக்கும், நம் மூதாதைகள் வழங்கிய பழைய ஆங்கில மொழியை ஒப்பது பிறிதில்லை என்னும் உண்மை முற்றும் உணரப்படுதற்கு பல ஆண்டுகளின் பழக்கம் இன்றியமையாதது வேண்டப்படும்“.
(Quoted in Meikle John’s The Art of Writing Enlighs, ப, 128), என்ற ஆங்கலிமொழியைத் தூயதாய் வழங்குதலின் மேன்மையை வற்புறுத்தி பேசியிருக்கின்றார்.
ஆங்கிலமக்களுக்கு நாகரிகமுந் தம்மைப் பாதுகாத்துக கொள்ளத்தக்க நிலையும் வாயாதிருந்த பழையநாளில், ஐரோப்பாவின் வடமேற்கு மூலையிற் றோன்றிய சுடர், ஆங்கிலர், சாகிசர் முதற் பலமொழி பேசும் பல்வகை நாட்டாரும் பிரித்தானிய தீவின்கண் வந்து புகுந்து, அங்கு இருந்த பிரித்தானியரைப் போரில் வென்று அவர்தம்மை தத்தம் ஆளுகைக்குள் அடக்கி அரசுபுரிந்து வந்தனர். அவர்கட்கு பின்னரும் பல்வகை மக்களும் அடுத்தடுத்து படையெடுத்து வந்து ஆங்கிலரைத் தங்கள் கீழ் வைத்து ஆண்டு அவரொடு கலந்தமையாலேதான், கெல்டிக், காந்திநேவியம், இலத்தீன், நார்மன், பிரஞ்சு, கிரேக்கு முதலான பற்பல மொழிச்சொற்களும் ஆங்கிலத்தில் ஒன்றன்பின் ஒன்றாய்க் கலந்து அதனைப் பெருக்கச் செய்தன. முதன்முதற் சூடர் வந்தகாலத்து, அதன்கண் இரண்டாயிரஞ் சொற்களுக்குமேல் இல்லையென்று அம்மொழிவல்ல இலக்கண ஆசிரியர்கள் வரைந்திருக்கின்றனர். இங்ஙனம் முதலில் மிகக் குறைந்தநிலையி லிருந்து பின்னர்க் காலந்தோறும் பலமொழிக் கலப்பினாற் பெருகிய ஆங்கிலமொழி, அப் பிறமொழிச் சொற்களின் உதவியின்றி முற்றும் நடைபெறுதல் இயலாதென்பதனை ஆங்கிலம் நன்கு உணர்ந்தார் எவரும் விளக்கமாய் அறிந்திருப்பவும், ஒருவர் அவ்வுண்மையை மறைத்து, அது தனித்து இயங்கமாட்டாதது என்று எனவுந் தனித்து இயங்கவல்ல அதனை அவ்வாறு இயக்குதல் பயன்றராது எனக் கண்டே அதனைப் பல மொழிச் சொற்களோடுங் கலப்பித்து வழங்குகின்றார் எனவுங் கூறியது பெரிதும் பிழைபாடுடைத்தாம் என்க.
இனி, முற்றுந் தனித்து இயங்கமாட்டாக் குறைபாடுடைய ஆங்கில மொழியையே இயன்றமட்டுந் தூய்தாய் வழங்குதலிற் கண்ணுங்கருத்தும் வைக்கவேணடுமென்று அம்மொழிக்குரிய ஆங்கில நன்மக்கள் ஓயாது வற்புறுத்து வருகவராயிற், பண்டைக்காலந்தொட்டே நாகரிக வாழ்க்கையிற் சிறந்தாராய்த், தாம் ஒருவர்கீழ் அடங்கி வழாது, பிறமொழி பேசுவாரையுந் தங்கீழ் அடக்கைவைத்துத், தமது செந்தமிழ்மொழியையே நீண்டகாலம் வரையில் தூய்தாய் வழங்கி வளர்த்து வாழ்ந்துவந்த தமிழ்மக்களின் கால் வழியில் வந்தோரான நாம் நமது அருமைச் செந்தமிழ் மொழியைத் தூய்தாய் வழங்குதலில் எவ்வளவு கண்ணும் கருத்தும் வைக்க வேண்டும்! அதற்காக நாட் எவ்வளவு எடுக்க வேண்டும்! அங்ஙனமிருக்க அதனைக் குறைபாடுடைய ஆங்கிலத்தோடு ஒப்பிட்டு, அதன் தூய்மையைக் கெடுத்து வடமொழி முதலான மற்றை மொழிச்சொற்களை அதன்கட் கொண்டுவந்து புகுத்தல் அதற்கு ஓர் ஆக்கமேயாம் என்று கூறுவார் உரை இப்போது அவர் அடைந்திருக்கும் அடிமைத்தனத்தைக் காட்டுகின்ற தன்றோ?
பண்டைநாளில் ஆரியப் பார்ப்பனருந் தமிழர்க்கு அடங்கியிருந்து தமிழைவளர்த்தனர்; இப்போது அப்பார்ப்பனர் பல்வகைச் சூழ்ச்சிகளால் தமிழர்க்கு மேம்பட்டார்போற் றம்மைதத்மே உயர்த்துக்கொண்டு, தமிழரைக் தங்கீழ் அடக்கி அடிமைகளாக்குதற் பொருட்டு மிகமுயன்றும் அதுமுற்றுங் வைகூடமையின், தமிழர்க்குரிய தமிழையாவது ஆரியம் முதலான பிறமொழிச் சொற்கள் சேர்த்துக் கெடுத்து வைத்தால் தங்கருத்து நிரம்புமென்றுன்னி அதனைப்பெரிதும் மாசுபடுத்திவருகின்றார். அப்பார்ப்பனர் வலையில் சிக்கிய தமிழ்ப்புலவர் சிலரும் அச்சூழ்ச்சியை பகுத்துணர்ந்து பாராது ‘குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிக்காம்பு‘ போல், அவ்வாரிய பார்ப்பனரினும் பார்க்கத் தாமே தம் தனித்தமிழ் மொழியைச் சிதைத்தொழிக்க மடிகட்டி நிற்கின்றனர்! ஐயகோ! பண்டுதொட்ங்கி புனிதமாய் ஓங்கிநிற்கும் நம் தனித்தமிழ்த் தாயைப், பிறமொழிச்சொற்களென்னுங் கோடாரியினுள் நுழைந்து கொண்டு, இத் தமிழ்ப்புதல்வர் வெட்டிச் சாய்க்க முயல்வது தான் கலிகாலக் கொடுமை! இத்தீவினைச் செயலைப்புரியும் இவர்தம்மைத் தடுத்து, எம் தமிழ்த்தாயைப் பாதுகாக்க முன்நிற்கும் எம்போல்வராது நல்வினைச்செயல் ஒருகாலுங் கலிகாலக் கொடுமையாகாதென்று உணர்மின் நடுநிலையுடையீர்!
2. தமிழில் பிறமொழிக் கலப்பு
இன்னும் இதனை விளக்கிக் காட்டல் வேண்டின், உயர்ந்த மலை முகட்டில் என்றும் நீர் ஊறும் ஒரு சுனையிலிருந்து இடையறாது ஓடிவரும் ஓர் அருவிநீருக்குத் தமிழ்மொழியை ஒப்பிட்டுச் சொல்ல்லாம்; இனி இவ்வருவிநீர் ஓடிவரும் இடையிடையே சுரப்பின்றிச் சேறும் நீருமாய் நிற்குங் குளங்குட்டைகட்கு வழக்கில் இல்லாத ஆரியம் இலத்தீன் முதலான மொழிகளையும், இன்னும் அவ்வழியின் கீழே இருபாலும் ஆங்காங்குப் புதிது தோன்றித் தனித்தனியே ஓடும் யாறுகளுக்கு ஆங்கிலம் துலுக்கு முதலான மொழிகளையும், இவ் யாறுகளிலிருந்து பிரிந்து வந்து அவ்வருவியொடு கலக்குஞ் சிறுசிறு கால்களின் நீருக்கு அம்மொழிகளிலிருந்து தமிழில் வந்து கலக்குஞ் சில சொற்களையும் ஒப்பாகச் சொல்லலாம். பன்னெடுங் காலமாக வறளாது ஓடிவருந் தமிழருவியானது தான் வரும் வழியிலுள்ள ஆரியம் முதலான பழைய குளங் கூவல்களிற் சென்று அவற்றின் சொற்களாகிய நீரையுந் தன்னொடு கலப்பித்துப் புதியவாக்கிப் பின்னும் இடையிடையே தண்கண் வந்து கலக்கும் பின்றைக்காலத்துச் சொற்களாகிய சிறு கால்களின் நீரையுந் தன்னுருவாக்கித் தன்னை வழங்கும் மக்கட்குப் பெரிதும் பயன்பட்டு வருகின்றது.
இனி, ஒரு மொழியின்சொற்கள் மற்றொரு மொழியில் வந்து கலக்கவேண்டுவதுதான் என்னையென்று வினாவினால்; ஒரு மொழியினைப் பேசும் மக்கள் தம் நாட்டையும் தம் இனத்தாரையும் விட்டு நீங்காமல் இருக்கும் வரையில், அவர் தாம் இருக்கும் நாட்டின்கண்ணே பிறமொழி பேசும் பிறநாட்டார் வந்து சேராதிருக்கும் வரையில், அவர் பேசும் மொழியில் அயல்மொழிச் சொற்கள் வந்து கலப்பதற்கு இடமேயில்லை. அங்ஙனமின்றி அவர் பல நாடுகளையும் அந்நாடுகளிலுள்ள பலதிறப்பட்ட மக்களையும் போய் கண்டும், அவர் நாட்டுப் பண்டங்களைத் தாம் விலைகொண்டும், தம்நாட்டுப் பண்டங்களை அவர்கட்கு விற்றும், அவர்தம் வழக்கவொழுக்கங்கள் சிலவற்றைத் தாங் கைப்பற்றியும், தமக்குரிய சிலவற்றை அவர்கைப் பற்றுமாறு தந்தும், ஒருவரது நாகரிகத்தை ஒருவர் பின்பற்றியும் ஒழுகும் உயர்ந்த அறிவும் உயர்ந்த நடையும் வாய்ந்தவர்களா யிருந்தால் அவர் பேசும் மொழியில் மற்ற மொழிச்சொற்கள் புகுந்து கலவாமல் இரா. ஆகவே, இம்முறையால் நோக்குமிடத்துப் பலவகையாலும் உயர்ந்த நாகரிகவாழ்க்கை யுடையராய் விளங்கிய தமிழ் மக்கள் வழங்கிவந்த தமிழிற் பிறமொழிச் சொற்கள் சில வந்து கலக்கலானது இயற்கையேயா மென்பது உணரப்படும்.
அங்கனமாயிற், பழைய காலத்தில் றமிழ் மக்கள் அயல் நாட்டவரொடு சென்று அளவளாவும் நாகரிக முதிர்ச்சி உடையரா யிருந்தா ரென்பதற்குச் சான்று என்னை யெனின்; இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன்னரே எழுதப்பட்ட தொல்காப்பியம் என்னும்நூல் ஒன்றுமே ஒரு பெருஞ் சான்றாமென்க. அருமை பெருமையிற் சிறந்த இவ் வொருநூலை ஒரு சிறிது உற்றுநோக்குவார்க்கும்; இந்நூல் எவ்வளவு பழமை யுடையதாய் இருக்கவேண்டு மென்பதும், மிகப் பழையநாளிலே இவ்வுயர்ந்தநூலை எழுதிய ஆசிரியரோடு ஒருங்கிருந்த தமிழ் முதுமக்கள் எத்துணைச் சிறந்த அறிவும் நாகரிகமும் வாய்ந்தவராய் யிருந்திருக்கவேண்டுமென்பதும் அவர் உள்ளத்திற் பதியாமற்போகா. இந்நூலின்கண் உள்ள “முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை“ என்னுஞ் சூத்திரத்தாற் பண்டைத் தமிழ்மக்கள் பொருள் ஈட்டும் பொருட்டுத் தம் மனைவி மக்களையும் நாட்டையும் விட்டுக் கடல் வழியே மரக்கலன்களில் ஏறித் தொலைவான நாடுநகரங்களிற் சென்று சேர்வரென்பது பெறப்படுகின்றது. தமிழர்கள் கடல்தாண்டிச் சென்று வேற்றுநாடுகளிற் பொருள்முயற்சி செய்த்த்துபோலவே, வேற்று நாட்டவரும் தமிழ்நாட்டிற் போந்து பல முயற்சிகளை நடத்தினாரென்பது ஈபுருமொழியில் எழுதப்பட்ட பழைய விவிலிய நூலினால் இனிது விளங்குகின்ற தன்றோ?
காவிரிப்பூம்பட்டினத்திற் கரிகாற்சோழன் என்னும் வேந்தர்பெருமான அரசாணட்போது, பல்வேறு மொழிகிள் வழங்கிய பலவேறு தேயத்தாரும் அந் நகரத்தினிடத்தே போந்து கலந்திருந்து பல தொழின்முயற்சி நடத்தினமையும்; கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளிலிருந்து குதிரைகள் வந்தமையும்; இமயம் மேரு முதலிய மலைகளிலிருந்து பொன்னும் மணியும், மேற்கணவாய் மலைகளிலிருந்து சந்தனைக்கட்டை அகிற்கட்டைகளுந். தென் கடலிலிருந்து முத்துக்களுங், கீழ்க்கடலிலிருந்து பவளங்களுங், கங்கையாற்றிலிருந்து அதன் பொருள்களும், இலங்கை பர்மா என்னும் நாடுகளிலிருந்து அவற்றின் விளைபொருள்களும் அந்நகரத்தில் வந்து விலயானமையும், இற்றைக்குச் சிறிதேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட பட்டினப்பாலையிலும், அதற்குச் சிறிது பிற்பட்ட சிலப்பதிகாரத்திலும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றவல்லவோ? கிரேக்கநாட்டிலுள்ள யவனர்கள் தமிழ்நாட்டிற்போந்து தமிழ அரசர்களின் கீழ்ப் பல அலுவல்கள் பார்த்தமை பெருங்கதை, முல்லைப்பாட்டு முதலான பழந்தமிழ்ப்பாட்டுகளில் நன்கு குறிக்கப்ட்டிருக்கின்றது. இங்ஙனம் பண்டைநாளில் தமிழ்நாட்டார் அயல்நாடுகளிலும் அயல்நாட்டார் தமிழ் நாடுகளிலும் போந்து ஒருவரோடொருவர் அளவளாவியிருந்தமை இனிது புலப்படுதலின் வேற்று நாட்டவர்க்குரிய மொழிகளின் சொற்களிற் சில தொன்றுதொட்டே தமிழிற் புகுந்து வழங்கவ்வாயின என்று உணர்தல் வேண்டும். இவ்வாறு நேர்ந்த கலப்பின் றன்மையை ஆராய்ந்து உணர்வார்க்குத் தமிழர் பண்டைக்காலத்திலேயே நாகரிகத்திற் சிறந்து விளங்கினா ரென்பது புலனாகும்.
அங்ஙனமாயின், வேற்று நாட்டுச் சொற்கள் தமிழிற் கலந்த்த்து போலவே, தமிழ்ச் சொற்களும் மற்றைத் தேயமொடிழிகளிற் கலந்து காணப்படுதல் வேண்டுமேயெனின்; ஆம், தமிழிச்சொற்கள் பல பழைய மொழிகளிலுங் கலந்து வழங்கவேபடுகின்றனவென்று கடைப்பிடிக்க. ஆணி மீனம் நீர் தாமரை கலை குடம் முதலான பலசொற்கள் ஆரிய மொழியிலும், அசை அருவி இரும்பு ஈன எல்லாம் மென்மை முகில் முதலான பல சொற்கள் ஆங்கிலம் இலத்தீன் கிரேக்கு முதலான ஐரோப்பியர் மொழிகளிலும், அவா இரு ஊர் எருமை சினம் செவ்வை முதலான பலசொற்கள் சாலடி ஈபுரு முதலான மிகப்பழைய மொழிகளிலும், இன்னும் பல மற்றும் பல மொழிகளிலுமாக ஒருங்கு கலந்து காணப்படுகின்றன. அவையெல்லாம் இங்கெடுத்துக் காட்டப் புகுந்தால் இக் கட்டுரை மிக விரியுமாதலின் அவை தம்மை நுண்ணிய ஆராய்ச்சியாற் பல நூலுதவி கொண்டு அறிந்து கொள்க.
இவ்வாறு மொழிகள் ஒன்றோடொன்று கலக்கப் பெறுதற்கு அவற்றை வழங்கும் மக்களின் நாகரிகமே வழியாயிருத்தலால், நாகரிகம் வாய்ந்த எந்தமொழியும் பிறமொழிக் கலப்பில்லாமல் இருத்தல் இயலாது. இது மக்களியற்கையினையும் அவரது வாழ்க்கையின் இயல்புகளையும் அமைதியாக ஆராய்ந்து பார்ப்பவர்க் கல்லாமல் மற்றவர்க்கு ஒருசிறிதும் விளங்கமாட்டாது. தமிழ்மக்கள் பண்டதொட்டே நாகரிகத்திற் சிறந்தவராயிருந்ததனால் அவரோடு பல மொழி பேசும் பல நாட்டவருங் கலந்து பழகவே மற்ற மொழிகளின் சொற்களிற் சில தமிலுங் காணப்படுவனவாயின. இங்ஙனங் காணப்படுதல் தமிழ்மொழியின் நாகரிகச் சிறப்பினையும் அதன் வளப்பத்தினையுங் காட்டுகின்றதே யல்லாமல், அதற்கு அது தாழ்வாதலைக் குறிக்கின்ற தில்லை. உண்மை இவ்வாறிருப்ப, இதனைச் சிறிதும் உணரமாட்டாமல் சுவாமி நாத தேசிகர் என்பார் தாம் இயக்கிய இலக்கணக் கொத்தில், “அன்றியுந் தமிழ்நூல் களவிலை அவற்றுள், ஒனறேயாயினுந் தனித்தமிழுண்டோ“ எனக் கூறியது வெற்றாரவார வுரையாமன்றிப் பிறிதென்னை?
மேலும், நெடுங்காலம் உயிரோடிருந்து திகழும் ஒரு மொழியிற் பிற சொற்கள் கலத்தல் போலச், சின்னாள் உயிரோடிருந்து பின்னர் இறந்துபடும் ஒரு மொழியிற் பிறசொற்கள் மிக நுழைந்து நிலைபெறுதற்கு இடமேயில்லை. இதனாலேதான், ஆரிய மொழியிற் பிற மொழிச் சொற்கள் மிகுதியாகச் சேர்ந்து காணப்படவில்லை. ஆரியம் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே எவரானும் பேசப்படாமல் இறந்துபட்டமையின், அதன்கட் பிறசொற்கள் புகுதற்கு வழியில்லாமற் போயிற்று. இதுகொண்டு, ஆரியமொழி உலகவழக்கிற்குச் பயனப்டாமையோடு அது நாகரிக வளர்ச்சிக்கு இசைந்த்தாகமையும் நன்கு பெறப்படும். ஒருவர் ஒருமொழி பேசுகின்றவராய் இருந்தால் மட்டும் அவர் மற்றமொழிச்சொற்களை எடுத்தாள நேருமல்லது, அவர் ஏதுமே பேசாத ஊமையாயிருந்தால் அவர் பிறவற்றை எடுத்தாளச் சிறிதும் இடமுண்டாகமாட்டாது. ஆதலால், சொற்களை ஏற்கவும் மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படவும் மாட்டாதாயிற் றென்க.
இனி, உலவழக்கின் கண் உள்ள ஒரு மொழியிற் பிறசொற்கள் வந்து சேருமாயின், அஃது இயற்கையாக நிகழவேண்டுமே யல்லாமற் கல்வியிறிவுடைய சிலரால் அவர் தமக்குத் தோன்றியபடி யெல்லாம் அவை செயற்கையாக வலிந்து புகுத்தப்படுத லாகாது. அன்றி அங்ஙனம் புகுத்தப்படுமாயின் அவை அம் மொழியில் நிலைபெற்று உயிர்வாழா. இருவர் தமக்குள் தோன்றிய நேசத்தால் ஒருங்கு ஒட்டி உயிர்வாழ வேண்டுமே யல்லாமல், பிறரால் வலிந்து பொருத்தப்பட்டு அவர் ஒன்றுபட்டிருத்தல் இசையாகாது. இவ்வியல்பு மொழிகளின் சேர்க்கையாலும் பிறழாமல் அமைந்திருப்ப தொன்றாகும். ஒரு மொழி வழங்கும் ஒருதேயத்தில் உள்ளார் புதிதாக ஒரு பண்டத்தைக் கண்டுபிடித்துச் செய்து அதற்குத் தமது மொழியிற் பெயரும் இட்டுப் பிறகதனை வேறு தேயங்களிற் கொண்டுபோய் விலைப்படுத்துங்கால், இப் பண்டத்தின் பெயர் வேறு மொழியிற் கலத்தல் இயற்கையேயாம். இத்தகைய நிகழ்ச்சிகளிலுங் கூடப், புதுப் பண்டங்கள் வாங்கும் மற்ற நாட்டவர் நாகரிகமும் உயர்ந்த அறிவும் உடையராயிருந்தால், அவற்றிற்குத் தமது மொழியிலேயே புதுப்பெயரிட்டும் வழங்குவர்.
மேல்நாட்டிலிருந்து வந்து இத் தென்னாட்டில் விலையாகுந் தெளிவான ஒருவகை மட்பாண்டத்தைக் கிளாசு என்றுங் கோப்பை என்றும் வழங்குகின்றனர்; கிளாசு கோப்பை என்னும் இச்சொற்கள் ஆங்கிலச் சொற்களின் திரிபுகளாகும்; இப்பாண்டங்கள் மேல்நாட்டிற் செய்யப்பட்டவனாயிற் தமிழ்நாட்டிற்குப் புதியனவாய் இருத்தலால் இவற்றிற்குரிய ஆங்கிலச் சொற்களைத் தமிழர் தாமும் எடுத்தாளுதல் பொருத்தமேயாம்; இப் பாண்டங்களையுங் டத் தமிழறிவு மிக்கவர்கள் ‘கண்ணாடிக் குவளை‘ ‘பீங்கான் கிண்ணம்‘ என்று தமக்குரிய தமிழ்ச் சொற்களாலேயே வழங்குவர். ‘எஞ்சின்‘ ‘டிரெயின்‘ ‘டிக்கட்டு‘ ‘டிராம்‘, ‘இஸ்கூல்‘, ‘கமிஷன் ஏஜண்டு, ‘ஷாப்பு‘, ‘மார்க்கட்டு‘ முதலான ஆங்கில மொழிகளைப் பொதுமக்கள் அவற்றிற்கு முறையே ‘பொளி‘, ‘வண்டித்தொடர்‘, ‘சீட்டு‘, மின்சார வண்டி‘, ‘பள்ளிக்கூடம்‘, ‘தரகன்‘, ‘கடை‘, ‘அங்காடிக்கடை‘ முதலான தமிழ்ச் சொற்களையே இட்டு வழங்குவர். கல்வியறிவும் நாகரிகமும் வாய்ந்தவர்கள் இங்ஙனம் பிறநாட்டுச் சொற்களை எடுத்து வழங்கவேண்டிய இடங்களிலும் அவற்றிற்கு ஈடாகத் தமது மொழியிலுள்ள சொற்களையே நடைபெறவிட்டு வாழ்வர். இவ்வாறு செய்தல் அவர்க்குள்ள முயற்சியின் திறத்தையும் நாகரிகச் சிறப்பினையுந் தமது மொழியில் வைத்த பற்றினையும் வெளிப்படையாகக் காட்டுவதாகும்.
முயற்சியும் உண்மையான பற்றும் இல்லாதவர்கள் பிறமொழி பேசுவோருடன் கலந்தால் தமது மொழிச் சொற்களை விட்டு பிறசொற்களையே எளிதில் எடுத்தாளத் தலைப்படுவார்கள். தமக்குரிய மொழியை வளம் பெறச் செய்யும் முயற்சியும் அதன்பாற் பற்றும் இல்லாமற் போதல் எதனால் என்றாற், பிறிதொரு மொழியிலுந் தாம் வல்லுநர் என்பதைக் காட்டித் தம்மை உயர்வுபடுத்திக் கொள்ளும் எண்ணமும், பொருள் வருவாய் ஒன்றிலேயே நோக்கம் வைத்து அதற்கேற்றது பிறமொழிப்பயிற்சியே என்ற பிழைபட்ட கருத்துங் கொள்ளப்பெற்றிருத்தலாலேயாம். இதற்கு இத்தென்றமிழ்நாட்டிலுள்ள பார்ப்பன மாந்தரும், அவரைப் பின்பற்றினவரும் விடாப்பிடியாய்க் கைக்கொண்டிருக்கும் ஒழுகலாறே ஒருபெருஞ் சான்றாம். இத் தமிழ்நாட்டின்கண் உள்ள பொருள்களை வழங்குதற்கு ஏராளமான தமிழ்ச்சொற்கள் இருப்பவும், அவற்றைவிடுத்து இத் தென்னாட்டிற்கு உரியவல்லாத வடமொழிச் சொற்களாலும், இப்போது சில ஆண்டுகளாக ஆங்கிலச்சொற்களாலும் அவற்றை வழங்கிவருகின்றனர். தமிழ்மக்கள் எல்லாருந் தண்ணீர் எனறு வழங்கிவர, அவர்கள் அதனை ஜலம் என்று கூறுகின்றார்கள். ‘எனக்கு ஓர் ஏனத்திலே குளிர்ந்த நீர் கொண்டு வா, வறட்சியாயிருக்கிறது‘ என்று சொல்லவேண்டுவதை ‘நேக்கு ஒரு பாத்திரத்திலே குளுந்த ஜலங் கொண்டா ‘, தாகமா இருக்கு‘ எனற் வடசொற்களைச் சேர்த்தலோடு இடையிடையேயுள்ள தமிழ்ச் சொற்களையுஞ் சிதைத்துப் பேசுகிறார்கள். இன்னும் ‘பயனற்ற செயல்‘ என்பதைப் ‘பிரயோஜனமற்ற காரியம்‘ என்றும், வெயில் வெளிச்சம், வானம், காற்று, நெருப்பு, உணவு, உழவு, அலுவல் தூய்மை, நாடோறுங், கல்வி என்பவற்றை முறையே சூர்ய ப்ரகாசம் ஆகாசம், வாயு, அக்நி, ஆகாரம், விவசாயம், உத்யோகம், பரிசுத்தம், திநேதிநே, வித்தை என்றும் வடசொற்களை அவர்கள் நூற்றுக்கணக்கான வடசொற்களை அவர்கள் தமிழ் பேசுங்கால் இடையிடையே வேண்டாக்கூறலாய் வழங்கி வருகின்றனர்.
இங்ஙனஞ்செய்தல் இறந்துபோன வடசொற்களை முற்றுமே அங்ஙனம் விடாமற், சில பல சொற்களையேனும் உலக வழக்கிற் பயிலவிடுதற்கு வழியாய் இருத்தலின் அது குற்றமாய்க் கொள்ளப்படுதலாகா தெனின்; இறந்துபோன வடமொழியின் சில சொற்களை உயிர்ப்பிக்கின்றேன் என்று புகுந்து பல நூறாயிரம் மக்களுக்குப் பயன்பட்டு வழங்கி இறக்கச் செய்தல் எள்ள்ளவும் பொருந்தாது. கையிலுள்ள பெருந்தொகைப் பொருளைக் கடலிற் கொண்டுபோய் எறிந்துவிட்டு, நிலத்தை அகழ்ந்து அடியிலுள்ள பொருள்களை எடுக்க முயல்வார் திறத்திற்குந், தமிழ்ச் சொற்களைக் கைந்நெகிழ விட்டு வடசொற்களை வருந்திச் சொல்ல முயல்வார் திறத்திற்கும் வேறுபாடு சிறிதுங் காண்கிலேம், வடமொழியைத் தனியே முழுதும் உயிர்ப்பிக்க முயன்றாலும் அதனைச் சிறிது பயனுடைய தென்று சொல்லலாம், அங்கனஞ் செய்ய இயலாது அதன்சொற்கள் சிலவற்றை மட்டும் உயிரோடுலவுஞ் சிறந்தமொழியில் வலிந்து புகுத்தி அம் மொழிக்குக் கேடு சூழ்தல் பெரிதும் இழிக்கத்தக்கதொன்றாம். இன்றியமையா இடங்களில் வடசொற்கள் சிலவற்றை எடுத்தாளுதல் வழுவென்று யான் கூறவில்லை. பொருள்களைக் குறிப்பிடுதற்கு ஏராளமான தமிழ்ச்சொற்கள் இருக்கையில், அவற்றை விடுத்துப் பிறவற்றைப் புகுத்தலையே பெரியதொரு குற்றமாக நினைக்கின்றோம். பிற சொற்களை எடுத்து, வழங்குதற்கு இன்றியமையா இடங்கள் என்பன, புதுப் பொருள்களைக் கூறுதற்குத் தமிழில் உள்ள சொற்களை எவ்வளவு முயன்று பார்த்தும், அதற்கு அவை; இசையாத நேரங்களே யாம், முயற்சியும் அறிவும் உடையவர்கள் கருத்துவைத்தால் எத்தகைய புதுப் பொருள்கட்குந் தமிழிலிலேயே பெயரமைக்கலா மென்பதே நமது கொள்கை. உயிரோடுலவி வரும் மொழிகள் எவையாயிருப்பினும், அவை எத்துணை ஏழைமை யுடையவாயினும் அவற்றிற் குரியோர் உண்மைப் பற்றுடையராய் அவற்றை அங்ஙனம் வளம் பெறச் செய்து வருகுவராயின் அதனால் அவர் உரமான அறிவும் நன்முயற்சியும் மேன்மேல் மிகப் பெற்றுத் தாமுந் தம் மினத்தாரும் உயர்வர்.
இனி, இவ்வாறன்றி இக்காலத்துப் பார்ப்பனமாந்தர்போல் வடமொழிச் சொற்களையுந் தமிழின் இடையிடையே கலந்து பேசுவோர் தூய தமிழ் பேசும் மற்றைப் பெரும்பாலரின் வேறாகப் பிரிந்து அவர்களொடு தொடர்பில்லாதவராய், அவர்களால் தாமுந் தம்மால் அவர்களுந் பெரும் பயன் வரவரக் குறையத் தாமுந் தம் மினத்தாருஞ் சில நூற்றாண்டுகளில் தமிழுக்கு முற்றும் புறம்பாய் வேற்றினமாய் மறைந்து போவ ரென்பது திண்ணம். இஃது இவர்க்கே தாழ்வாய் முடியுமல்லாமற், பன்னூறாயிரம் மக்களினிடையே பரவியிருக்குந் தமிழுக்கு இதனாற் சிறிதுஞ் சிறுமை வராது.
அங்ஙனமன்று, பார்ப்பன மாந்தரும் அவர்போல்வார் பிறரும் வடமொழியையே தமக்குரிய மொழியாகக் கருதி அதனையே மிகவும் பயிலுதலின் அதன் சொற்களைத் தமிழிற் கலந்து பேசுகின்றாரெனின்; அங்ஙனம் வடமொழியினிடத்து மிகுந்த பற்றுவைத்து அதனையே பயிலும் அவர்கள் அம் மொழியைத் தம் பெண்டிர் பிள்ளைகள முதலான எல்லார்க்குங் கற்பித்து அம்மொழியிலேயே அவருடன் பேசுதல் வேண்டும்; அதுவே அதன்பால் வைத்த உண்மைப் பற்றுதலுக்குப் பொருத்தமாகும். தமிழருடன் தமிழிற் பேச விருப்பம் இல்லாத அவர்கள், தாம் தமிழரோடு உண்ணல் கலத்தல்கள் செய்யாது அவரின் வேறுபிரிந்து தம்மை உயர்வு படுத்திக் கொண்டது போலவும், அவர்களுள் வடமொழியை நிரம்பக் கற்றோர்சிலர் தமிழரொடு தாம் நேரே பேசுதலும் ஆகா தென்று ஓர் ஏற்பாடு செய்துகொண்டிருத்தல் போலவுந் தாமுந் தமிழையே முற்றும் பேசாதொழிதலே பொருத்தமுடைத்தாம். அவ்வாறு தங்கொள்கைக்கு ஏற்ப நடத்தலை விடுத்து வடசொற்கள் சிலவற்றைத் தமிழரொடு கலந்து பேசுதலால் மட்டுமே அவர் வடமொழிக்குரியவராய் வடுவிரோ? அவருட் சிலர் இப்போது ஆங்கிலக் கற்று ஆங்கிலச் சொற்களையுந் தமிழிற் சேர்த்துப் பேசுகின்றார். அதனால் அவர் ஆங்கிலமொழிக்கு உரியவராவரோ? ஆகாரன்றே. அதுபோலவே. வடமொழியைத் தஞ் சுற்றத்தார் எல்லாரோடும் முற்றும் பேசத் தெரியாத அவர் அதன்பாற் பாராட்டும் பற்றுவெறும் போலியே அல்லாமல் ஏதும் பயனுடையதாக காணப்படவில்லை. ஆகவே, உலகவழக்கிற்குப் பயன்படாத வடமொழிமேல் வைத்த போலிப்பற்றால் வளம்நிறைந்த தூய தமிழைக் கெடுக்க் முந்துதல் பார்ப்பண மாந்தர்க்கும் அவரைப் பின்பற்றினார் பிறர்க்குஞ் சிறிதும் முறையாகாது.
அவ்வாறான்று, வடமொழி உலகவழக்கிற் பெண்டிரானும் பிள்ளைகளானும் பேசுதற்குப் பொருந்தி வராத பெயர் வினைகளில் உயர்திணை அஃறிணைப் பாகுபாடுகள் உலக இயற்கையில் அமைந்தபடியாக இல்லாமற் செயற்கையாக, வலிந்து வகுக்கப்பட்டு ஊன்றிப் பயில்வார்க்கும் பேருழைப்பினையும் பெரு வருத்த்தினையும் தருவதாயிருத்தலின் அஃது எல்லாரானும் பேசப்படாதனை ஒரு குற்ற்மாகச் சொல்லுதல் ஆகாதெனின்; இது குற்றமோ அன்றோ என்பதனை இங்கே முடிகட்டப் புகுந்திலம். உலகவழக்கிற் பெண்டிர் சிறார் முதலான எத்திறத்தாரானும் பேசுதற்கு இயைந்த எளிய தன்மையுந், தன்னைக் கற்பாருக்கு இனியனவாய்க் காணப்படும் இயற்கைப்பொருத்தமுள்ள சொனமுடிபு பொண்முடிபுகளும் வாய்ந்து பல்லாயிரம் ஆண்டுகளாக இளமை குன்றாமல் வழங்கிவரும் அருமை பெருமை மிக்க செந்தமிழ் மொழியில் வேண்டா கூறலாய் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கொண்டுவந்து நுழைத்தல் பெரிதுங் குற்ற்மாவதாம் என்பதனையே இங்கே விளக்கப் புகுந்தோம்.
இனி இன்றி யமையாது வேண்டப்பட்டுத் தமிழில் வந்து கலக்கும் அயல்மொழிச் சொற்கள் தமிழிற் பொருந்துதற்குரிய இயல்பினியுஞ் சிறிது ஆராய்ந்து காட்டுவேர்ம். தமிழில் வந்து கலக்கும் ஆரியம் ஆங்கிலம் முதலான அயல்மொழிச் சொற்கள் தம் தன்மை திரிந்து தமிழோ டொத்துத் தமிழினுவத்தைப் பெற்று இயல்பாக வழங்கிவருகின்றன. ஜ்ஞாநம், மிருகம், ஸ்தலம், ரங்கா;, க்ஷீரம், ப்ரகாசம், ப்ராசி, சக்தி, ஈச்வர, தலம், அரங்கம், கீரம், பிரகாசம், பாசி, சத்தி, ஈசுரன் முதலியனவாகத் திரிந்து தமிழோடொத்து நடைபெறுகின்றன; க்ளாஸ், கப், பாட்ல், பம்ப், பைபிள், ஐயோநியன்ஸ், கிரைஸ்ட், ஜான் முதலான ஐரோப்பிய மொழிச் சொற்கள் தமிழில் முறையே கிளாசு, கோப்பை, போத்தல், வேம்பா, விவிலியம், யவனர், கிறித்து, யோவான் முதலியன வாகத் திரிந்து தமிழோடொத்து நடக்கின்றன, இங்ஙனமே ஆரியம் தமிழ் முதலியவற்றின் சொற்கள் ஆங்கிலமொழியிற் பலவாறு திரிந்து அம்மொழியின்றன்மைக் கேற்ப உலவுதலை, இவ் விந்ரியாவிலுள்ள ஊர்ப்பெயர்கள் ஆங்கிலத்திற் சொல்லப்படுங்கால் திரிபடையுங் வேறுபாடு ஒன்றுகொண்டே நன்கு தெளியலாம்.
இன்னும் இவ்விந்தியாவில் இப்போது வழங்கிவரும் பல மொழிகளுள் ஒன்றன் சொற்கள் மற்றொன்றிற் கலக்குங்கால் அம்மற்றமொழியின் றன்மைக்கு இசையவே அவை திரிந்து வழங்குதலை அவ் வம் மொழியிலும் ஆராய்ந்து பார்த்துத் தெளியலாம், இவ்வாறு ஒருமொழியின் சொற்கள் மற்றமொழியில் அதன் றன்மைக் கேற்பத் திரிந்து வழங்கும் இயற்கை கண்கூடாய் அறியப்பட்டுக் கிடத்தலின், தமிழிலும் பிறமொழிச் சொற்கள் தமிழுக் கேற்றவாறு திரிந்து வழங்கல் பெரிதும் பொருத்தமாவதே யாம். ஒரு மொழிச்சொற்கள் வேறொ மொழியில் அங்ஙனந் திரிந்து வழங்க வேண்டுவதுதான் என்னை? அவற்றைத் திரிஹப்படுத்தாமல் உள்ளபடியே வைத்து வழங்குதலால் வரும் இழுக்கு என்னை? எனின்; உலகவக்கில் நடைபெறும் ஒவ்வொரு மொழியும் உயிரோடுஉலவும் உடம்பு போல்வதாகலானும், உடம்பு நிலைபெற்றிருந்து வளர்தற்பொருட்டு அதற்கு இடும் பல்வேறு உணவுப்பொருள்களுந் தந்தன்மை திரிந்து அவ் வுடம்பின் றன்மையோடு ஒத்து ஒன்றுபட்டால் அல்லாமல் அவ் வுடம்பு நிலை பெற்று வளராமைபோல உயிரோடு உலவும் ஒருமொழியிற் போந்து கலக்கும் பிறமொழிச் சொற்கள் அம்மொழியோ டொத்துத் திரிந்து அதனோடொன்றுபட்டு நின்றால்ல்லாது அம்மொழி வளராமையானும், ஒரு மொழியில் ஏனைமொழிச் சொற்கள் திரிந்து காணப்பட வேண்டுவது இன்றியமையாத இயற்கையேயாம் என்க. இவ்வியற்கைக்கு மாறுபாடு இல்லாமலே தமிழ்மொழியின் கண்ணும் வேற்றுமொழிச் சொற்கள் தமிழிற் கேற்பத் திரிந்து காணப்படுகின்றன.
இஃதிங்கனமாகவும், இப்போது சில ஆண்டுகளாகப் பார்ப்பனரில் தமிழிலே நூல் எழுதுவார் சிலரும் அவரைப் பின்பற்றின வேறுசிலரும் வடமொழிச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் மிகுதியாய்க் கொண்டு வந்து தமிழில் வலித்து புகுத்துவதோடு, அவற்றைத் தமிழுக்கேற்பத் திரிபுபடுத்தாமல் அம்மொழியில் உள்ளபடியே எழுதுகின்றார்கள். ஜ்ஞானம், ம்ருகம், ப்ரகாசம் முதலியனவாக மேலேடுத்துக் காட்டிய வடசொற்களையும், க்ளாஸ், பாட்ல், கிரைஸ்ட், முதலான ஆங்கிலச் சொற்களையுந் தமிழுக்குப் பொருந்தத் திரிபுபத்தாமல், இனிய மெல்லிய தமிழ்ச்சொற்களின் இடையே அவற்றை அங்ஙனமே எழுதினால் அவை, தமிழின் இனிமையிலும் அருமையிலும் பழகினார்க்கு எவ்வளவு அவருப்பாய்த் தோன்றுகின்றன! தேனும் பலாச்சுளையுங் கலந்து அருந்துவார்க்கு, அவற்றிடையே முட்கள விரவியிருந்து நாவிற் றைத்தால் அஃது எவ்வளவு துன்பத்தினையும் வெறுப்பினையுந் தருமோ, அதுபோலவே வேண்டா வழக்காய் உருவு திரியாமல் தமிழில் வரையப்படும் வேற்று மொழிச்சொற்கள் உண்மைத் தமிழறிஞர்க்குப் பெரியதொரு வருத்தத்தினையும் அருவருப்பினியும் விளைகின்றன.
எவ்வகைப் பொருளையும் எத்தகைய கருத்தையுந் தெரிவித்தற்கு எண்ணிறந்த தமிழ்ச்சொற்கள் இருப்பவும், அவற்றைப் புறந்தள்ளி மற்றைமொழிச் சொற்களை அதன்கட் கொண்டுவந்து புகுத்தலே ஒரு பெருங் குற்றமாம்; அதன்மேலும், இயற்கைக்கு மாறாய் வருந்திச் சொல்ல வேண்டும் அவ் வயல்மொழிச் சொற்களை இயற்கை யோடொத்து மெல்லென நடக்குந் தமிழ்ச் சொற்களினிடையே சேர்த்துக் கூறுதல் அதனினும் பெரியதொரு குற்றமாம். அஃத்ல்லாமலும், வயிற்றிற்கு இடப்பட்ட உணவுப்பொருள்கள் தமதுஉருவு திரிந்து உடம்பிற்கு வேண்டும் பாலாக மாறாமல், அவை அங்ஙனமே வயிற்றினில் கிடந்தால் அவை அவ் வுடம்பிற்குச் சிறிதும் பயன்படாமையோடு அவ்வுடம்பினையும் பழுதுபடுத்துமன்றோ? அதுபோலவே, தமிழின் றன்மைக்கு ஏற்ப உருவுதிரியாமல் எழுதப்படும் வடசொற்கள் முதலியனவும், பயன்படாது போதலொடு தமிழின் அழகையுஞ் சிதைவுபடுத்தா நிற்கின்றன.
மேலும், இயற்கையழகாற் சிறந்த ஒரு நங்கைக்கு அவளது இயற்கயழகு ஒன்றுமே அமையும்; அன்றி அவட்கு வேறு ஆடையணகிலன்கள் அணிந்து பார்க்க வேண்டினும், அவளது அழகிற்குப் பொருத்தமான சிலவற்றைத் தெரிந்தெடுத்து அவளை ஒப்ப்னைசெய்வதே வாய்ப்புடைத்தாம்; அங்ஙனமின்றி அவளது நலத்திற்குப் பொருந்தாவற்றையும், பொருந்துமெனும் அளவிற்கு மேற்பட்ட ஆடையணிகலத் தொகுதிகளையும் அவள்மேல் இடுதல் அவளது ஒப்புயர்வற்ற அழகைக் குறைப்பதொடு காண்பார்க்கும நகையினைத் தரும். நலம் நிரம்பிய தமிழுக்கு அதன் நலம் ஒன்றுமே அமையும்; அன்றி இன்றியமையாதது வேற்றுமொழிச் சொற்களைச் சேர்க்க் வேண்டி வந்தக்கால், அதன் இயல்புக்குப் பொருந்தினவற்றையே சேர்த்தல் அழகுடைத்தாம் அவ்வாறன்றி அதன் இயற்கைக்கு மாறானவற்றையும் மாறாகவிடினும் அளவுக்குமஞ்சிய அயல்மொழிச் சொற்களையும் அதன்கண் வலிந்து புகுத்தல், அதன் நலத்தைக் குறைப்பதோடு தமிழறிவு மிக்க சான்றோர்க்கு நகையினையும் விளைக்கும். ஆதலால், அயல்மொழிச் சொற்களை உருவு திரியாமற் சேர்த்தலும், உருவு திரிந்தவற்றையும் அளவுக்கு மிஞ்சித் சேர்த்தலும் ஒரு சிறிதும் பொருந்தா வென்று கடைப்பிடித்துணர்க், அங்ஙனமாயின், தமிழ்ச்சொற்கள் இயற்கைக்கு மாறான செயற்கையொலி யுடையவாதலும் எவ்வாறெனின், அவ் வேறுபாட்டைத் ‘தமிழின் ஒலி யெழுத்துக்கள்‘ என்ற கட்டுரையில் விளக்கிக்காட்டியிருக்கின்றோம், ஆண்டுக் கண்டுகொள்க.
3. தமிழ்த்தாய்
“கண்ணுதற் பெருங்கடவு ளுங்கழக மோடமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந் தமிழ்ஏனை
மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்தா எண்ணவும் படுமோ“
திருவிளையாடற்ப்புராணம்
தமிழராகிய நாம் நாடோறும் பேசிவருந் தீம்பாலைப் பருகிப் பசிதீர்ந்து அவள் மடியிற்கிடக்க, அவள் நம்மைக்கொஞ்சி முத்தம்வைத்து நம்மைப் பாராட்டிப் பேசியது தமிழ்மொழியி லன்றோ? சிறுகுழந்தையாய் இருந்த அந்தக் காலந்தொட்டு மறுபடியும் தாய்மொழி தமிழேயாகும். நாம் சிறு குழவியாய் இருந்தபோது நம் அன்னையின் நாம் இந்த உலகைவிட்டு அகன்றுபோகும் வரையில் நம் தாய் தந்தையரோடும் உடன் பிறந்தவரோடும் மனைவி மக்களொடும் நம் நாட்டில் உள்ளவரோடும் நாம் ஊடாடி உறவாடிப் பேசுவதும் நம தருமைப் தமிழ் மொழயிலன்றோ? இங்ஙனம் நமது உயிரோடும் உடம்போடுங் கலந்து, நமதறிவைத் தன் வண்ணம் ஆக்கிக், கனாக்காணும் காலத்துங், கனாவுலகில் உள்ளவரோடு நாம் பேசுகையில் அப் பேச்சோடும் உடன்வந்து நிற்பதாய்க் கிளர்ந்து விளங்குவது நமது இனிய செந்தமிழ்மொழியேயாய் இருத்திலின், நமதுயிர் இவ் வுலகவாழ்வைத் துறந்து மறுமையுலகிற் சென்று உலவும்போதும் நமக்கு உற்றதுணையாய் நம்மொடு உடன் வந்து நிற்பது தமிழ் மொழியே யாகுமென்பது தெளிவாகப் பெறப்படுகின்றதோ? இவ்வாறு இம்மை மறுமை யிரண்டிலும் நமது உயிர்க்கு உற்ற துணையாய் இருநது உதவுவது தமிழ்மொழி ஒன்றுமே யாகையால், நடுவே நாம் கற்கும் ஆங்கிலம் நமக்கு எப்போதும் உதவியுந் துணையுமாய் இருந்து பயன்படமாட்டா என்றுணர்க.
நமது வயிற்றுப் பிழைப்புக்காகவும், வேறுசில காரணங்களுக்காகவும் ஆங்கிலம் ஸமஸ்கிருதம் முதலான மற்ற மொழிகளை நாம் வருந்திக் கற்கவேண்டுவது கட்டாயமாய்த் தோன்றினாலும், இவற்றின்பொருட்டு நமது இனிய செந்தமிழை மறப்பதும் அதனைப் பயிற்சி செய்யாமற் கைவிட்டிருப்பதும் நமதுயிரையே நாம் அழிப்பதாய் முடியும். அழகுமிக்க செந்தாமரைமலரின் செந்நிறத்தையும் அதில் துளும்பி வழியுங் கொழுந்தேனையும் அகற்றிவிட்டு, அவற்றிற்கு மாறாய் அதற்கு மஞ்சள் நிறத்தை ஊட்டிச் செங்கழுநீர் மணத்தைப் புகுத்திக் கற்கண்டின் நுரைச் சொரிந்து வைப்பேன என்று ஒருவன் அதன் இயற்கையை மாற்றப் புகுந்தால் அது கைகூடாமல் அத் தாமரை மலர் அழிந்துபோவது போல, மற்ற மொழிகளும் இனிய சொல்லுஞ் சிறந்த பொருளும் உயர்ந்த பயனும் உடையனவாய் இருந்தாலும், தமிழின் நிறமும் அதன் பொருளின் மணமும் அதன் சுவையின் தேனும் இயல்பாகப் பொருந்தப்பெற்ற நமதுயிரை அவ்வியற்கையினின்றும் மாற்றி அம் மற்ற மொழிகளின் தன்மையை அதற்கு ஏற்றினால் அது தன் றன்மை இழந்கு அழிந்து போகும். தமிழ் முதலான மொழிகளுள் ஒன்றையேனும் அல்லது இரண்டு மூன்றையேனுந் தமது குழந்தைப்பருவந்தொட்டு பேசி வருபவர், தாம் பேசும் அவ் இயற்கை மொழிகளையே மேலுங் மேலுங் கற்று தமது அறிவை வளம்படுத்த்தாம்ல் அவற்றைக் கைவிட்டு முற்றும் புதியவான ஆங்கிலம் ஆரியம் முதலான மொழிகளையே பழகி வருவராயின் அவர் நீண்டநாள் உயிர்வாழ்வார். இதனாலன்றோ, தமிழைக் கைவிட்டு ஆங்கிலம் ஆரியம் முதலியவற்றை கற்றுப் பழகும் நம் நாட்டவர் பலர் முப்பது அல்லது நாற்பது ஆணடுகட் பலவகை நோய்களாற் பிடிக்கப்பட்டு மாய்ந்துபோகின்றனர்.
தன்னியற்கையில் வலுப்பட்டு நில்லாத ஒருதூணின் மேற் பெருஞ் சுமைகளை ஏற்றினால் அவற்றைத் தாங்காமல் அது முறிந்து விழுவதுபோலத், தமக்குரிய மொழியைக்கற்று வலிவு பெறாத ஒருவனது அறிவின்மேல் வேறு மொழிகளை ஏற்றினால் அவற்றைத் தாங்கமாட்டாமல் அது பழுதுபட்டுப் போமன்றோ? தாய்ப்பால் நிரம்ப உண்டுவளர்ந்த பிள்ளை ஆண்டு முதிரமுதிர அரியபெரிய முயற்சிகளை யெல்லாம் எளிதிற்செய்து நீண்டநாள் உயிர்வாழ்தல் போலத் தமிழ்ப்பால் உண்டு வளர்ந்தவர் எத்தகைய மொழிகளையும் வருத்தமின்றிக் கற்று நெடுநாள உயிர் வாழந்திருப்பர். தமிழொடு மற்ற மொழிகளையுங் கற்றவர் நீண்டகாலம் உயிரபிழைத்திருந்தாலுந், தமிழை விட்டு அயல் மொழிகளை மட்டும பயிலுகின்றவர் விரைவில் உயிர் மாளுதலும் இயற்கையாய் நிகழ்தலைக் காண்பவர்களுக்கு நாம் கூறும் இவ்வுண்மை நன்கு விளங்கும்.
அறிவிற் சிறந்தவரான ஆங்கில நன்மக்கள் தமக்கு இயற்கையில் உரிய ஆங்கிலமொழியை நனறாகக் கற்ற பிறகுதான் வேறு மொழிகளைக் கற்கின்றார்கள; தமது மொழியைக் கல்லாமல் வேறு மொழிகளைச் சிறிதுங் கற்கவே மாட்டார்கள். இப்படிப்பட்ட உயர்ந்த பழக்கம் அவர்களிடத்தில் இருப்பதனாலேதான் அவர்கள் தமது மொழியில் நிகரற்ற புலமையுடையராய் இருப்பதொடு, தாம் கற்கும் வேறு மொழிகளிலும் வல்லவராய்ச் சிறந்து விளங்கி நீண்டநாள் உயிர்வாழ்ந்து உலகத்திற்கு அளவிறந்த நன்மைகளை எல்லாம் விளைவித்து வருகின்றார்கள். நம்மவர்களோ தமக்குரிய செந்தமிழ் மொழியைச் சிறிதுங் கல்லாமலுஞ், சிறிது கற்றாலுந் தமிழ்நூற் பயிற்சி நன்கு நிரம்பாமலும், வயிற்றுப் பிழைப்பிற்குரிய ஆங்கிலம் முதலான அயல்மொழிகளையே மிகுந்த பொருட் செலவு செய்து, பல ஆண்டுகள் அல்லும் பகலும் உழைத்துக் கற்றுக்கொள்ளுகின்றார்கள். கற்றும் என்! நம் தமிழ்நாட்டிற்குரிய தென்னங்கன்றைப் பெயர்த்துக் கொண்டு போய்ப் பனிமிகுந்த ஆங்கிலநாட்டில் வைத்தால் அஃது அங்கே வளராமல் அழிந்துபோவது போல, நமது செந்தமிழைவிட்டு மற்ற மொழிகளையே தம் காலமெல்லாங்கற்ற அவர் அதனால் வலிவிழந்து மெலிந்து விரைவில் உயிர் துறக்கின்றனர்! ஐயோ! வயிற்றுப் பிழைப்புக்கென்றே முழுதுங் கற்ற மற்றமொழி அவரது பிழைப்புக்கே இடையூறு விளைத்துவருதலை நம்மவர் அறியாமல் வரவரத் தமதுவாழ்வில் அருகிப்போவது நினைக்குந்தோறும் நமதுள்ளத்தை நீராய் உருக்குகின்றது! இந்நிலைமையைச் சிறிதாயினுங் கருதிப்பார்ப்பவர்கள் நமது தமிழ்மொழிப் பயிற்சி நம் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத அருமருந்தாமென்பதை உணராமற் போவரோ.
இது மட்டுமோ, இத் தென்னாடின்கண் நமது தமிழ்மொழியானது இருநூற்று மூன்று இலட்சத்துத் தொண்ணுற்றையாயிரம் பெயர்களாற் பேசப்பட்டு வருகின்றது. இத் தென்னாட்டில் மட்டுமே யன்றி, இலங்கையிலும் பர்மாவிலும் சிங்கப்பூர் பினாங்கு முதலான மலாய் நாடுகளிலும், மோரீசு தென்னாப்பிரிக்கா முதலான இடங்களிலும் நமது தமிழ்மொழையைப் பேசுவோர் பெருந்தொகையா யிருக்கின்றால்கள். இவ்வளவு பெருந்தொகையாய் உள்ள தமிழ்மக்க் ளெஙல்லாரும் அறிவிலும் நாகரிகத்திலும் உயர்ந்து விளங்க வேண்டுமாயின், அவர்கள் தமக்குத் தெரிந்துள்ள தமிழ்மொழியின் வழியாகவே அங்ஙனம் ஆகல்வேண்டும், மிகுந்த பொருட்செலவுங் காலக்கழிவும் வருத்தமுமின்ற அவர்களைக் கல்வியில் வல்வராக்குதற்கு இசைவான இந்த எளிய முறையை விடுத்து, அவர்கட்கு புதுமையாக ஆங்கிலம் ஆரியம் முதலான சொற்களைக் கற்பித்து அவர்களை உயர்த்தல் வேண்டு மென்று நினைப்பவர் ஒரு காலத்துந் தம்மெண்ணத்தை நிறைவேற்ற மாட்டார். ஆதலால், நம் தமிழ்மக்களை உண்மையாகவே முன்னேற்ற வேண்டுமென்னும் எண்ணம் உடையவர்கள், அவர்களுக் குரிய தமிழ்க் கல்வின் வாயிலாகவே அதனைச் செய்யக்கடமைப்பட்டிருக்கின்றார்கள். மற்றழிகளில்நாடோறும் புதியனவாய் வெளிவரும் அரும்பொருள்நூல்களை யெல்லாந் தமிழில் மொழிபெயர்பித்துக் கற்பிக்கத் தலைபட்டால், இப்போது பதினைந்து ஆண்டுகளுக்குமேல் ஆங்கிலமொழியை மிக வருந்திக் கற்ற ஒருவர் தெரிந்து கொள்ளும் பொருள்களெல்லாம், நமது செந்தமிழ் மொழியில் ஏழெட்டு ஆண்டுகளில் இன்னுஞ் செவ்வையாக்க் கற்றுத் தேறலாம். ஆங்கிலம் ஆரியம் முதலிய மொழிகளில் அவர் எவ்வளவுதான் கற்றுத் தேறினாலும், தாம் அம் மொழிகளில் அறிந்த பொருள்களைத் தமிழ் மக்கள் எல்லார்க்கும் புலப்படும்படி எடுத்துச் சொல்லிப் பயன்படுத்தல் இயலாது; தமிழ்கற்றவரோ தாம் அறிந்தவைகளைத் தமிழ்மக்க ளெவர்க்கும் நன்கு விளங்கும்படி எடுத்துச் சொல்லிப் பெரிதும் பயன்படுவர். இதனால் தமிழ்நாட்டவர் தமிழ்கற்ப தொன்றே தமக்கும் பிறர்க்கும் பயன்படுவதற்கு ஏவாம் என்க.
இனி, ஏழெட்டு, நூற்றாணடுகளாய்ப் புதிது முளைத்தெழுந்து இப்போது ஆங்காங்கு வழங்கி வரும் பலவேறு மொழிகளையும் போல்வ தன்று நமது தமிழ் மொழி; இஃது இன்ன காலத்திலேதான் தோன்றியதென்று எவராலுங் கட்டுரைத்துச் சொல்லமுடியாத பழமையுடையதாய், இத்தனை காலமாகியுந் தனது இளமை சிறிங்குன்றாதாய் உலாவி வருகின்றது. தமிழைப் போலவே பழமையுடையன வென்று சொல்லத்தக்க ஆரியம் கிரேக்கு இலத்தீன் ஈபுரு அராபி சீனம் முதலான பல தேய மொழிகளெல்லாம் இப்போது உலகவழக்கில் இனறி இறந்தொழிய, நம் செந்தமிழ்மொழி ஒன்றுமே இளமைத்தன்மை வாய்ந்து இலங்குகின்றது. இவ்வுண்மையை, மனோன்மணீயத்தில்,
‘பல்லுலகும் பலவுயிருந் படைத் தளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறுபரம்பொருள் முன்னிருந்த படி யிருப்பதுபோற்
கன்னடமும் களிதெலுங்குங் கவின்மலையாள முந்துளவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியமபோல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையாநின்
சீரிளமைத் திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துமே“
எனறு வந்த தமிழ்த்தாய் வணக்கச் செய்யுளிலுங் கண்டு கொள்க.
பழமையில் இதனோடு ஒத்த ஆரியம் முதலான மொழிகளெல்லாம் இறந்தொழியவும், இதுமட்டும் இன்னும் இளமையொடு விளங்குவது எதனால் என்றால்; தமிழ் அல்லாத மற்ற மொழிகளில் எல்லாம் மக்கள் இயற்கைக்கு மாறான உரத்த ஓசைகளும் பொருந்தா இலக்கண முடிபுகளுங் காணப்படுதலால் அவை வழங்குதற்கு எளியனவாய் இல்லாமல் நாளடைவில் மாய்ந்துபோகத், தமிழில் இயல்பாற் பிறக்கும் அமைந்த இனிய ஒலிகளும் மிகவும் பொருத்தமான இலக்கணமுடிவுகளும் இயைந்து, இது படித்ததற்கு எளியதாய் இருத்தலினாற்றான் அங்ஙனம் இஃதின்னும் இளமை குன்றாமல் நடைபெறுக்னிறதென்று உணர்ந்து கொள்க. ’க்ருதம்‘ ‘திருஷ்டி‘ ச்ருஷ்டி‘ ‘ஹிருதய‘ முதலான ஆரியச் சொற்களைச் சொல்லிப் பாருங்கள்! அவை பேசுதற்கு எவ்வளவு வருத்தமாய் இயறைகைக்கு மாறுபட்டனவாய் இருக்கின்றன! இச்சொற்களையே தமிழ்வடிவாகத் திரித்துக் ‘கிருதம்‘ ‘திருட்டி‘ ‘துரிதம்‘ சிருட்டி‘ ‘இதயம்‘ எனறு சொல்லிப்பாருங்கள! அப்போது அவை பேசுதற்கு எவ்வளவு எளியனவாய் வருத்தமில்லாதனவா யிருக்கின்றன இனி, இவற்றிற்கு நோரான ‘இழுது‘ ‘பார்வை‘ ‘விரைவு‘ ‘படைப்பு‘ ‘நெஞ்சம்‘ முதலான தூய தமிழ் சொற்களைச் சொல்லிப்பாருங்கள்! இவை அவற்றைக்காட்டிலுஞ் சொல்லுதற்கு இன்னும் எத்தனை எளியவாய் இனியவாய் இருக்கின்றன! இங்ஙனமே ஆரியம் முதலான மற்றமொழிகளின் இலக்கணங்கள் இயறைக்குமாறய் இருத்தலும், தமிழ் இலக்கணம் ஒன்றுமே இயற்கைக்குப் பொருத்தமாய் இருத்தலும் யாம் எழுதிய ஞானசாகர முதற்பதுமத்திலும், பண்டைக்காலத் தமிழர் ஆரியர் என்னும் நூலிலுங் கண்டுகொள்க. இங்கே அவையெல்லாம் விரித்துரைப்பதற்கு இடமில்லை. அதுநிற்க. இனி மொழியின் அமைப்பையும் மக்களியற்கை உலக இயற்கைகளையுந் திறம்பட விரித்துரைத்த தொல்காப்பியம் போன்ற மிகப் பழைய நூலை நமது செந்தமிழிலன்றி வேறு மொழிகளிற் காணல் இயலுமோ? அறம் பொருள் இனபம் வீடு என்னும் நாற்பொருளையும் முற்றும் எடுத்து விளக்கிய திருக்குறள், நாலடியார் போன்ற அரும்பெரு நூல்களை நம்செந்தமிழ் மொழியன்றி வேறு எந்த மொழியேனும் உடையதாமோ? சிலப்பதிகாரம், மணமேகலை என்னும் பெரும் பழந்தமிழ்க் காப்பியங்களோடு ஒத்தவை எம் மொழியிலேனும் உளவோ? உலக வியற்கை பிறழாது பாடிய தமிழ்ப்பாட்டுகளுக்கு நிகரானவை வேறெந்த மொழியிலேனும் எடுத்துக்காட்டல் இயலுமோ? திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவை, தேவாரம், பெரியபுராணம் என்னுந் தெயவத் தமிழ் நூல்கள், கன்னெஞ்சமுங் கரைந்துருகி எத்திறத்தவரும் இறைவன் அருட்பெருக்கில் அமிழ்ந்தி இனபுருவினராய் நிற்குமாறு செய்தல்போல, வேறு எந்த மொழியில் உள்ள் எந்நூலேனுஞ் செய்தல் கணட்துண்டோ? மக்கள முடிவாய்த் தெரியவேண்டும் மெய்ப்பொருள்களை யெல்லாந் தெளித்துக்கூறி முடிவுகட்டிய சிவஞானபோதம், சிவஞானசித்தி போன்ற மெய்ந்நூல்களும், அவற்றிற்கு மெய்யுரை விரித்த சிவஞான முனிவர் நுண்ணுரை போன்ற உரைநூல்களுந் தமிழிலின்றி வேறெந்த மொழியிலேனுங் காணப்ப்டுவதுண்டோ? இந் நூற்பொருள்களென்னுந் தீம்பாலை நமதுயிரெல்லாந் தித்திக்க குழைந்தூட்டும் நம் தமிழ்த்தாயை மறாவது பேணும் பெரும் பேற்றை நம் தமிழ்மக்கள் எல்லாரும் பெற்றுச் சிறந்திடுவாராக!
4, பகுத்துணர்வும் மாதரும்
அப்படி நினைத்தால் மக்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் வேற்றுமை யாது? மக்களினுந் தாழ்ந்த ஆடு மாடு குதிரை முதல் ஈ எறும்பு புழு ஈறான எல்லாச் சிற்றுயிர்களுங் கூடப், பசியெடுத்தபோது தமக்கு எளிதிலே கிடைக்கும் புல் இலை தழை கிழங்கு கனி தேன் முதலான இரைகளைத் தேடி உட்கொண்டும், மலையருவி ஆறு ஏரி குளங் கூவல் முதலியவற்றின் நீரைப்பருகியும், பசிதீர்ந்தபின் மரங்களின் அடியிலோ செடிகளின் நடுவிலோ மலைப் பிளவுகளின் இடையிலோ கிடந்துங் கவலையின்றி உறங்கிக் காலங்கழிக்கின்றன; மக்களுக்காவது உடுக்க ஆடை வேண்டும்; இச் சிற்றுயிர்களுக்கோ ஆடையும் வேண்டுவதில்லை; மழையில் நனையாமலும், பனியில் குளிராமலும் வெயிலில் பெதும்பாமலும் அவ் வுயிர்களைப் பாதுகாக்க தடிப்பான தோலோடு அடர்த்தியான மயிரையுங் கம்பளிப் போர்வைபோல் அவைகளுக்கு இறைவன் கொடுத்திருக்கின்றான். வெப்பம் மிகுந்த நமது தமிழ்நாட்டிலுள்ள ஆடுமாடுகளுக்குக் குளிரின் துன்பம் மிகுதியாய் இல்லாமலையால், அவைகளின் உடம்பின் மேல் அடர்ந்து நீண்ட மயிர்கள் இல்லை. ஆனால் வடக்கே இமயமலையிலும். அம் மலைச்சாரலில் உள்ள இடஙக்ளிலும் போய்ப் பார்த்தால், அங்குள்ள ஆடுமாடுகளுக்கு அடர்ந்து நீண்ட மயிர்களிருத்தலைக் காணலாம். ஏனென்றால், அம் மலைநாடுகளில் தாங்கமுடியாத பனியுங் குளிரிலும் அவ்விலங்குகள் வெற்றுடம்பு உள்ளனவா யிருந்தால், அவை உடனே விறைத்து மாண்டுபோகும். ஆதலால், அவ் வாடுமாடுகள் அங்குள்ள பனியிலுங் குளிரிலும் மாண்டு போகாமல் அவற்றைப் பாதுகாப்பதற்காகவே எல்லா இரக்கமும் உள்ள கடவுள் அவைகளின் உடம்பின்மேல் நீண்டு அடர்ந்த மயிரை வளரச் செயதிருக்கின்றான். ஆகவே, உணவின பொருட்டும் மக்களாகிய நாம் ஓயாமல் அடையுங் கவலையுந் துன்பமும் நம்மிற் றாழ்ந்த சிற்றுயிர்களுக்குச் சிறிதும் இல்லை. வேண்டும்போது இரைதேடித் தின்றும், உறக்கம் வந்தபோது உறங்கியும், ஆணும் பெண்ணுமாய்க் கூடித் தம் இனங்களைப் பெருக்கியும் அவைகள் கவலையின்றிக் காலங்கழிக்கின்றன.
இப்படிப்பட்ட சிற்றுயிர்களின் வாழ்க்கையையும், உணவுக்கும் உடுப்புக்கும் இருப்பிடத்திற்கும் அல்லும் பகலுமாய்ப் பாடுபட்டு, மனைவியாற் கணவனுங் கணவனால் மனைவுயுங் பெற்றோராற் பிள்ளைகளும் பிள்ளைகளாற் பெற்றோர்களும், ஒரு குடும்பத்தாரால் அவர்களின் சுற்றத்தாரும், ஒரு சுற்றத்தாரால் அவர்களின் குடும்பத்தாரும், ஓர் ஊராரால் அவர்தம் அரசரும், ஓர் அரசரால் அவர்தம் ஊராரும் ஆக எல்லாருமாய்ப் பலவகைத் துன்பங்களுக்கு ஆளாகி நோயிலுங் கவலையிலும் இடையறாது உழன்று வருந்திவரும் மக்களாகிய நமது வாழ்க்கையையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் நமது துன்பவாழ்க்கையை விடச் சிற்றுயிர்களின் இன்பவாழ்க்கை எத்தனையோ நம்போன்ற மக்களைத் தெய்வமாக வணங்கியுந் தம்மையே தாம் பெரியராக நினைந்தும் வாழ்நாள் முதிராமுன்னரே கவலையாலும் நோயாலுங் கூற்றுவன் வாய்ப்பட்டு மடியும் நம் மக்கட்பிறவியை விட, இறைவனது பாதுகாப்பில் அடங்கிக் கவலையின்றி உயிர்வாழும் விலங்கினங்களின் வாழ்க்கை சிறந்த்தாயிருக்கின்றதன்றோ? அங்ஙனம் இருக்க, உண்ணல் உடுத்தல் உறங்கல் இன்புறுதல் என்னும் இவைகளாலேயே மக்கள் வாழ்க்கையானது சிறந்த்தா யிருக்கின்றதென நினைப் போமாயின், அஃது எவ்வளவு பேதைமையாகக் காணப்படுகின்றது!
அப்படியானால், எல்லாப் பிறவிகளையும் விட மக்கட்பிறவியே சிறந்த்தென்று அறிவுடையோர்களும் அவர் செய்து வைத்த நூல்களுஞ் சொல்வது ஏன்? என்றால், எந்தவகையில் மக்கட்பிறவியானது மற்றச் சிற்றுயிர்களின் பிறவியைவிட அங்ஙனஞ் சிறந்த்தா யிருக்கின்றது என்பதை நாம் நன்கு ஆராய்நதுபார்த்துத் தெளிதல் வேண்டும் மக்களாகயி நாம் பகுத்தறிவு உடைவர்களாயிருக்க, மற்றச் சிற்றுயிர்களோ அத்தகைய பகுத்துணர்வு உடையனவாய்க் காணப்படவில்லை. அதனாலேதான் நமது பிறவியானது மற்ற விலங்கின் பிறப்பைவிடச் சிறந்த்தாகுமென்று அறிகின்றோம். விலங்குகளுக்கு இது நல்லது, இது தீயது எனறு பகுத்துணர்தல் இயலாது. அவை வழக்கமாய்த் தின்னுந் தீனியையே உட்கொள்ளும்;
பெரும் புதர்களிலும் மலைக்குகைகளிலும் மரநிழல்களிலுங் கிடந்தபடியே நாளைக் கழிக்கும்; இவற்றிற்குமேல் அவைகள் ஒன்றையும் அறியமாட்டா; மேன்மேல் இன்பத்தைப் பெருக்கும் வழிவகைகளும் அவை தெரிந்துகொள்ளல் முடியாது; பிற உயிர்களுக்கு நன்மையாவது இது, தீமையாவது இது என்றும் அவை அறிவதில்லை; இந்த உலகத்தில் நாம் ஏன் நிலையாயிருப்பதில்லை? சிறிதுகாலத்தில் இந்த உடம்பு அழிந்துபோக உயிர் எங்கே போகின்றது? இந்த உடம்பின் உறவால்வந்த பெற்றோரும் மனைவிமக்களும் உடன் பிறந்தாரும் நேசரும் சுற்றத்தாரும் சூழ்ந்துகொண்டிருக்கவும் இந்த உயிர் திடீரென்று இவர்கள் எல்லாரையும் விட்டு எங்கே போகின்றது? அப்படிப்போகும் உயிரை இவர்கள் ஒருவருந் தடுக்கமாட்டார்களாய் அலறி வீழ்ந்து அழுவதேன்? எவராலுந் தடுக்கமுடியாத இந்தப் பிறப்பு இறப்புகளை வகுத்தவன் யார்? இவற்றை வகுத்வனது நோக்கம யாது? பெருந்துன்பத்திற்கு இடமான இப் பிறப்பு இறப்புகளை நீக்கும் வழியாது? என்று இங்ஙனமெல்லாம் ஆராய்ந்துபார்க்கக் கூடிய உணர்ச்சியும், அவ்வுணர்ச்சியால் அடையத்தக்க பெரும்பயனும் விலங்குகளுக்குச் சிறிதும் இல்லை.
மக்களாகிய நாமோ இவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்த்து, அவ் வாராய்ச்சியால் வரும் பயனை அடையத்தக்க உயர்ந்த நிலையில் இருக்கின்றோம், கிடைத்தற்கு அரிய இவ் வுயர்ந்த நிலையில் இருந்தும், இவ் வுண்மைகளை ஆராய்ந்து காலங்கழித்து, வகைவகையான உடைகளை உடுப்பதும், பளபளப்பான நகைகளைப் பூண்பதும், மினுமினுப்பான வண்டிகளிற் செல்வதும், நாளுக்குநாள் வளரும் புதுமைகளைக் காண்பதும், மேலுக்குமேல் எழும் பாட்டுகளைக் கேட்பதும், ஒன்றுக்குமேல் ஒன்று உயர்ந்த மணப்பண்டங்களை மோப்பதுங் கற்கக்கற்க இனிக்குங் கதைகளைக் கற்பதும் ஆகிய இவைகளே மக்கட்பிறவியினால் அடையத்தக்க பெரும்பயன்கள் என்று நம்மவர் நினைப்பார்களாயின், ஐயோ! அவர்கள் விலங்கினங்களினுங் கடைப்பட்டவர்கள் ஆவார்கள் அல்லரோ?
ஆதலால், நமக்கு அருமையாய்க் கிடைத்த பகுத்துணர்ச்சியை நாம் பலவகையான உயர்ந்த வழிகளிலும் வளரச்செய்து அதனால் அழியாப் பெரும்பயனை அடைதல்வேண்டும். இதுவரையிலுமே, பகுத்துணர்ச்சியால் நாம் அடைந்த பயன்களும் அடைந்துவரும் பயன்களும் அளவிடப்படா. நாவுக்கு இனிமையான பண்டங்களை நாளுக்குநாட் புதிது புதிதாகச் செய்யக் கற்றுவருகின்றோம்; கண்ணுக்கு அழகான உடுப்புகளையும் நகைகளையும் வகை வகையாகச் செய்வித்து அணிந்து வருகின்றோம்; பார்க்கப் பார்க்க்க் கவர்ச்சி தம் ஓவியங்களை (சித்திரப்படங்களை) எழுதுவித்தும், பாவைகளைச் செய்வித்தும் அவற்றை நம்முடைய இல்லங்களில் வைத்துப் பார்த்துப்பார்த்து மகிழ்ந்து வருகின்றோம்; மேன்மாடங்களுள்ள மாளிகை வீடுகளையும், அவற்றைச் சூழப்பசிய தோட்டங்களையும் அமைப்பித்து அவ் வீடுகளிற் களிப்புடன குடியிருந்தும் அத் தோட்டங்களில் மனக்கிளர்ச்சியோடு உலவியும் வருகின்றோம்; புல்லாங்குழல், யாழ், முழவு முதலான இசைக்கருவிகளின் இனிய ஒலிகளையும், அவற்றொடு சேர்ந்து பாடுவார்தம் இசைப்பாட்டுகளையுங் கேட்டுப் பெருங்களிப்பு அடைந்து வருகின்றோம்; நறுமணங் கமழும் பலவகை மலர்களைச் சூடியும், அம் மலர்களிலிருந்துஞ், சந்தனக்கட்டை அகிற்கட்டை முதலியவற்றைலிருந்தும் பெற்ற நெய்யையுங் குழம்பையும் பூசியும் இன்புறுகின்றோம்; மிக மெல்லிய பஞ்சுகளாலும் பறவைகளின் தூவிகளாலும் அமைக்கப்பட்ட மெத்தைகளை வழுவழுப்பாகச் செய்வித்த தந்தக் கட்டில்களில் இடுவித்து, அவற்றின்மேற் படுத்து இனிது உறங்குகின்றோம். இன்னும், ஏவற்கார்ரால் வீசப்படும் வெட்டிவேர் விசிறிகளாலுந், தாமே சுழலும் விசிறிப் பொறிகளாலும் வெயிற்கால வியர்பையினையும் புழுக்கத்தினையும் மாற்றி மகிழ்ச்சியடைகின்றோம். திறமைமிக்க புலவர்களால் எழுதப்படும் புதியி புதிய கதைகளைப் பயின்று உள்ளங்களிக்கின்றோம். இங்ஙனமாக, நமக்குள்ள பகுத்துணர்ச்சியின் உதவியைக்கொண்டு நாளுக்குநாள் நாம் அடைந்துவரும் இன்பங்களை முற்ற் எடுத்து உரைக்கப் புகுந்தால் அவற்றிற்கு இவ் ஏடு இடங்கொள்ளாது.
மேலும், நமக்குள்ள பகுத்துணர்ச்சியின் மிகுதிக்குத் தக்கபடி நாம் மிகுந்த இன்பத்தை அடைந்துவருவதுடன், பகுத்துணர்ச்சியில் நம்மினும் எத்தனையோ மடங்கு உயர்ந்த அறிவுடையோர்களாற் புதிதுபுதிதாக்க் கண்டுபிடிக்கப்பட்டு வரும் பொறிகளின் (இயந்திரங்களின்) உதவியால், நாம் எல்லையில்லாத இடர்கிடலின்றும் விடுவித்து எடுக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் புது புது நலங்களை அடைந்து இனிதாக வாழ்நாளைக் கழித்து வருகின்றோம். நீராவிவண்டிக்கள் ஏற்படாத அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முந்தி நம் முன்னோர்கள் ஓர் ஊரிலிருந்து தொலைவிலுள்ள மற்றோர் ஊருக்குச் செல்லநேர்ந்தால் அப்போது அவர்கள் எவ்வளவு துன்பப்பட்டார்கள்! அக்காலங்களிற் செவ்வையான பாட்டைகள் கிடையா. இருந்த சில பாட்டைகளோ கல்லும் கரடும் மேடும் பள்ளமும் நிரம்பிக், கால்நடையாய்ச் செல்வார்க்கும் மாட்டு வணடிகளிற் செல்வார்க்கும் மிகுந்த வருத்த்த்தையுங் காலக்கழிவினையும் பணச் செலவினையும் உண்டாக்கின. அப் பாட்டைகள் காடுகளின் ஊடும், மலைகளின் மேலும், பாலங்கள இல்லா ஆறுகளின் நடுவுங் கிடந்தமையால், அவற்றின் வழிச் செல்வோர்கள் புலி கரடி ஓநாய் பாம்பு முதலான கொடுவிலங்குகளாலுங் கள்வர்களாலும் அலைக்கப்பட்டுப் பொருளும் உயிரும் இழந்தும், பொருள் இழந்து அரிதாய் உயிர்தப்பியுந் துன்புற்றார்கள்; வழியிடையே உள்ள ஆறுகளில் வெள்ளங்கள் வந்துவிட்டால், ஓடம் விடுவார் இல்லாதபோது, அக் கரையில் வந்து சேர்ந்தார் அங்கேயும் இக்கரையிற் போய்ச் சேர்ந்தார் இங்கேயும் ஆக, வெள்ளம் வடியும் நாட்கள் வரையிற் கவலையோடு காத்திருந்தார்கள்.
கடலாற் சூழப்படாத நாடுகளில் இருப்பவர்களே இங்ஙனம் ஓர் ஊரிலிருந்து தொலைவிலுள்ள பிறிது ஓர் ஊர்க்குச் செல்ல இத்தனை துன்பங்களை அடைந்தார்களென்றாற், கடல்சூழ்ந்த இலங்கையில் உள்ளவர்களும், பெருங் கடல்களுக்கு அப்பால் உள்ள கடாரம் (பர்மா), சாவகம் (ஜாவா), சீனம், பாதளம் (அமெரிக்கா) து முதலான நாடுகளிலிருந்து மாந்தர்களும் இப் பாரதநாட்டுக்கு (இந்தியாவுக்கு) வரவும் இங்குள்ள மாந்தர்கள் அவ் அயல்நாடுகளுக்குச் செல்லவும் எவ்வளவு துன்பப்பட்டிருக்க வேணடும்!
அக் கொடிய துன்பங்களுக்கு அஞ்சியே, முற்காலத்திலிருந்து முன்னோர்களிற் பெரும்பாலார் ஓர் ஊரிலிருந்து தொலைவிலுள்ள மற்றோர் ஊருக்குச் செல்வதில்லை. முழு வறுமையாற் பசித்துன்பந் தாங்கமாட்டாதவர்களே தாம் இருந்த ஊரைவிட்டு, வேறு தாம் இருந்த ஊரைவிட்டு, வேறு வளஞ்சிறந்த ஊர்களைத் தேடிச்சென்றனர். மற்றையோர் தாந்தாம் இருந்த இடங்களிலேயே த்த்தமக்கு வேண்டிய உணவப் பணட்ங்களைப் பயிர் செய்துகொண்டு பெரும்பாலும் வறுமையிலேயே காலங்கழித்னர்.
அக்காலத்தில், ஓர் ஊரில் உண்டாக்கப்பட்ட பண்டங்கள், பிறிதொரு சிறிய ஊர்க்குச் செல்வதில்லை. காவிரிப்பட்டினம், உறையூர், மதுரை, கரூர் முதலான பெரிய தலைநகர்கள் சிற்சிலவற்றிற்கே அயலுர்களில் ஆக்கின பண்டங்கள் விலைப்படுத்தவரும், நிரம்ப்ப் பாடுபட்டு அப் பணட்ங்களை அந் நகரங்களிற் கொண்டுபோய்ச் சேர்ப்பிக்கவேண்டி யிருத்தலால், வணிகர்கள், அவைகளை மிகுந்த விலைக்கு விற்றனர். கடல் தாண்டியுள்ள நாடுகளில் ஆக்கின அரும்பணடங்கள் கப்பல்களின் வழியாக வரவேண்டி யிருந்தமையாலும், அக்காலத்துப் பாயக்ட்டிக் கப்பல்கள் கடலிலுள்ள சுழல்களுக்கும் அங்கே வீசுஞ் சூறைக்காற்றுகளுக்கு தப்பிப்பிழைத்துச்சென்று அயல்நாடுகளிற் கிடைத்த அவ் அரும்பண்டங்களை ஏற்றிக் கொண்டு திரும்பி இங்குவந்து சேரப் பல திங்களும் பல ஆண்டுகளுங் கடந்து போனமையாலும் அவ் அரும்பண்டங்களை மிக உயர்ந்த விலைக்கு விற்பனை செய்தார்கள். அதனால், மிகச் சிறந்த செல்வர்காளாய் உள்ளவர்களே அவ் வுயர்ந்த பண்டங்களை வாங்கத் தக்கவராய் இருந்தார்கள், அவற்றைப் பார்த்துப் பார்த்து ஏமாந்தனர்.
இவைகளே அன்றி அக்காலத்தில் இன்னும் ஒரு பேர்இடர் இருந்த்த்து. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் மிகவும் எட்டியிருந்த ஊர்களில் மழைபெய்ய வேண்டுங் காலத்திற் செவ்வையாக மழை பெய்யாமல் மறுத்துவிட்டால், அவ் வூர்களின் விளைபொருள்கள் விளைவு குறைந்து பஞ்சத்தை உண்டாக்கின. விளைந்த ஊர்களிலுள்ள உணவுப் பொருள்களை விளையாத ஊர்களுக்கு விரைவிற் கொண்டு போய்ச் சேர்ப்பிக்க எளிதான வழி அக்காலத்தில் இல்லை; அதனாற் பஞ்சம் நேரிட்ட ஊர்களிலிருந்த குடிமக்கள் அங்கங்கு இருந்தபடியே கணக்கின்றி மாய்ந்தனர்.
ஆனால், இக்காலத்திலோ முற்கூறிய துன்பங்களெல்லாம் ஒழிந்தன, எதனாலென்றாற், பகுத்துணர்ச்சியிற் சிறந்த ஜேம்ஸ்வாட் என்னும் ஒரு துரைமகன் நீராவியின் வல்லமையைக் கண்டுபிடிக்க, அவனுக்குப் பின்வந்த ஆங்கில அறிஞர் பலர் அந் நீராவியைக் கொண்டு வண்டிகளையுங் கப்பல்களையுங் இடர்நேராமல் மிகுவிரைவாக ஓட்டத்தக்க முறைகளைத் தெரிந்து கொண்டதனாலேயாம். ஆறு திங்கள் அல்லது ஓர் ஆண்டு மாட்டு வண்டியிற் சென்று சேர வேண்டிய ஊர்களை, இப்போது நீராவி வண்டியில் ஏறி நாலைந்து நாட்களிற் போய்ச் சேர்கின்றோம்; முன்னே ஐந்நூறுரூபா ஆயிரரூபா செலவழித்துக் கொண்டுபோய்ச் சேர வேண்டிய இடங்களை, இப்போது நாற்பது, ஐம்பதுரூபாச் செலவோடு போய்ச் சேர்கின்றோம். முன்னே வழியின் இடக்காலுங் கொடிய விலங்குகளாலுந், தீய கள்வர்களாலும் நேர்ந்த இடுக்கணக்ளெல்லாம் இப்போது இலையாயின, பெருங் கடல்களைத் தாண்டிச் செல்லவேண்டிய நாடுகளை யெல்லாம் நீராவிக் கப்பல்களின் வழியாய்க் குறித்தகாலத்திற் சுருங்கிய செலவில் இனிதாய்ச்போய்ச் சேர்கின்றோம். அந்நாடுகளிலுள்ள அரும்பண்டங்களை யெல்லாம நாமிருக்கும் நாடுகளுக்கும், நம்நாட்டிலுள்ள விளைபொருள்களை அந் நாடுகளுக்கும் ஏற்றுமதி, இறக்குமத செய்து, குறைந்தவிலைக்கு அவைகளை கொண்டுங் கொடுத்தும் வருகின்றோம். பிறாடுகளிற் புதியன புதியவனவாக ஆக்கப்பட்டுவரும் நேர்த்தியான அரும்பண்டங்களைச் செல்வர்களேயன்றி, ஏழைமக்களும் வாங்கத்தக்கபடி அவைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அது மட்டுமா! ஒரு நாட்டில் மழை பெய்யாது பஞ்சம் வந்தால், அயல் நாடுகளில் விளைந்த உணவுப் பண்டங்களை நீராவி வண்டிகளாலுந், நீராவிக் கப்பல்களாலும் உடனுக்குடன் அங்கே கொண்டுவந்து சேர்ப்பித்து அங்கு உள்ள பஞ்சத்தைத் தீர்த்துப், பல்லாயிரம் மக்களை உயிர் பிழைக்கச் செய்கின்றார்கள். இவைபோலவே இன்னும் எண்ணில் அடங்காத எத்தனையோ நலங்க ளெல்லாம், பகுத்துணர்ச்சியிற் சிறந்த ஆங்கிலப் பேர் அறிவாளிகள் கண்டுபிடித்த நீராவிப் பொறிகளால் நாம் அடைந்துவருகின்றனம் அல்லமோ?
இவைமட்டுமா! இலங்கையில் உள்ளவர்கள் இந்தியாவில் இருப்பவர்களோடும், இந்தியாவில் உள்ளவர்கள் இலங்கிய லிருப்பவர்களோடும், ஒரு வீட்டிக்குள் இருக்கிறவர்களைப் போற் பேசிக்கொள்வதற்கு வாய்த்திருக்கும் வியப்பான வசதியை எண்ணிப்பாருங்கள்! இஃது எதனால் வந்த்து? மின்வடிவின் இயக்கத்தையும், அதனைப் பயன்படுத்தும் முறைகளையும் ஆங்கில அறிஞர்கள் தமது பகுத்துணர்ச்சியின் நுட்பத்தாற் கண்டு பிடித்தமையால் அன்றோ? இலங்கையில் இருப்பவர்கள் இந்தியாவிலிருக்குந் தம் நண்பர்கட்குச் செய்திகள் தெரிவிக்க வேண்டுமானிலும் இந்தியாவிலிருப்பவர்கள் இலங்கையிலிருக்குந் தம் நண்பர்கட்குச் செய்திகள் தெரிவிக்க வேண்டுமானாலும் அவர்கள் அவற்றை ஒரு கடித்த்த்துண்டில் எழுதி மின்கம்பிச்சாலைக்கு அனுப்பி, அதற்குரிய சிறுகூலிக் காசையுங் கொடுத்துவிட்டால், ஒருமணி நேரத்தில் இந்தியாவிலிருப்பவர்களுக்கோ, இலங்க்கையி லிருப்பவர்களுக்கோ அச் செய்திகள் உடனே தெரிவிக்கப்படுகின்றன; அடுத்த மணி நேரத்தில் அவற்றிற்கு மறுமொழியும் வருகின்றது. இந்தப்படியாகவே, இந்தியா இலங்கைக்கு ஆறாயிரம் மைல் எட்டியுள்ள சீமை முதலான இடங்களுக்குஞ் சில மணிநேரத்திற் செய்திகள் தெரிவித்தலும், ஆங்காங்குள்ள செய்திகளைத் தெரிந்துகொள்ளுதலும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நடந்துகொண்டு இருக்கின்றன. ஆறாயிரமைல் எண்ணாயிரமைல் அகன்றுள்ள நாடுகளுக்கெல்லரம், இங்ஙனம் முற்காலத்திற் செய்திகள் வசதிகளும் எதனால் வந்தன? ஆங்கில அறிஞர்கள் இடைவிடாது தமது பகுத்துணர்ச்சியைப் பயன்படுத்தி மின்வடிவு முதலான கட்புலனாகா நுண்பொருள்களின் இருப்பையும் வலிவையும் இயக்கத்தையும் பயனையுங் கண்டுபிடித்தமையால் அன்றோ?
இன்னும் ஒரு புதுமையைப் பாங்கள்! ஒரு நூற்றாண்டுக்குமுன் இருந்த நம் முன்னோர்களிற், பட்ட மரமுந் தளிர்க்கக் கேட்ட பறவைகளும் மயங்க இன்னிசை பாடுவதில் வல்லவர்கள் எத்தனையோ பெயர் இருந்தார்கள்! ஆனால், அவர்கள் இறந்ததும், அவர்களின் தேன்போன்ற குரலும் அவர்கள் மிழற்றிய இனிய பாட்டுகளும் அவர்களொடு கூடவே இறந்துபோய்விட்டன! அவற்றை நாம் மறுபடியுஞ் செவி கொடுத்துக் கேட்பது இனி எக்காலத்தும் இயலாது! ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்டிருந்தோரின் நிலை அவ்வாறாய் முடிய, இந்த ஒரு நூற்றாண்டுக்குள் நாம் பிறப்பதற்கு முன்னிருந்த இவைவல்லோரின் நிலை அங்ஙனம் நாம் ஏமாறி வருந்தத்தக்கதாய் முடிந்துபோகவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்து முக்கனியினுங் கற்கண்டினும் இனிக்கப் பாடிய பாவாணர்கள் இவ்வுலகவாழ்வை நீத்துப் போனாலும், அவர்களுடைய அருமைக் குரல் ஒலியும், அவர்கள் பாடிய இன்னிசைப் பாட்டுகளும் நம்மைவிட்டு நீங்கிப் போகவில்லை. எப்படியென்றால், அமெரிக்கா தேயத்திற் பகுத்தறிவிற் சிறந்து விளங்கும் எடிசன் என்னுந் துரைமகனார் ஆக்கிய ஒலியெழுதி (Gramophone) என்னும் பொறியானது, அப் பாவாணர்கள் பாடிய இன்னிசைப் பாட்டுகளையும் அவர்களுடைய இனிய குரலொலிகளையும் அப்படியே பாடிக்காட்ட, அவைகளைக் கேட்டுக்கேட்டு நாம் வியந்து மகிழ்கின்றனம் அல்லமோ? அவ் இசைவாணர்கள் இறந்துபோயினும், அவர்கள் பாடிய இசைகள் இறந்துபோகாமல், நாம் திரும்பதிரும்பக் கேட்டு மகழும்படி பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன அல்லவோ?
இதுமட்டுமா! எந்தெந்த தேயத்தில் எந்தெந்த மொழியில் எவ்வெப் பாட்டுகளை எவ்வெவர் எப்படியெப்படிப் பாடினார்களோ, அவ்வப்படியே அப் பாட்டுகளையெல்லாம் நாம் இருந்த இடத்திருந்தே கேட்டு இன்புறும் பெரும்பேற்றை இவ்விசைக் கருவியானது நமக்குத் தந்திருக்கின்றதன்றோ? இத்தனை இன்பமும் நாம் எளிதில் அடையலானது எதனால்? எடிசன என்னுந் துரைமகனார் தமது பகுத்துணர்ச்சியைச் செலுத்தி எவ்வளவோ அரும்பாடுபட்டு இவ் இசைக்கருவியைக் கண்டுபிடித்த்தனாலன்றோ? அவர் தமது பகுத்துணர்வினைப் பயன்படுத்தாமல், மற்ற மக்களைப்போல் உண்பதிலும் உடுப்பதிலும் உறங்குவதிலுந் தமது காலத்தைக் கழித்திருந்தனராயின், நாம் அவ்வருமருந்த இசைக் கருவியைப் பெறுதலும், நம்முன்னோர்களின் தித்திக்குஞ் சுவைப் பாட்டுகள், அயல்நாட்டு இசைவாணரின் பலதிள வரிப்பாட்டுகள் என்னும் இவைகளைக் கேட்டு மகிழ்தலும் இயலுமோ?
இன்னும் பாருங்கள்! நாம் படிக்கும் புத்தகங்களையும், அவ்வூர்களில் நடக்குஞ் செய்திகளை யறிவிக்கும் புதினந்தாள்களையும் அச்சுப்பொறிகள் சிறிதுநேரத்தில் ஆயிரக்கணக்காக அச்சுப் பதித்து நமக்குக் குறைந்த விலைக்குத் தருகின்றன. அச்சுப்பொறிகள் இல்லா முன்நாளிலோ இவ்வளவு எளிதாக நாம் விரும்பிய அரிய பெரிய நூல்களைப் பெற்றுக் கற்றுத் தேர்ச்சி அடைதல் ஏலாது. பழைய நாட்களில் ஓர் ஊரிற் சிற்சிலரே கற்றவராய் இருப்பர். அவர்கள் தாம் கற்கும் நூல்களைப் பனையேடுகளிற் பாடுபட்டு எழுதிக் கருத்தாய் வைத்திருப்பர். அவர்கள் தம்மிடங் கல்விகற்கவரும் மாணாக்கர் சிலர் மட்டுத் தம்மிடத்துள்ள ஏட்டுச்சுவடிகளைப் பார்த்துச் சிறிது சிறிதாய் எழுதிக்கொள்ளும்படி அவர்க்குக் கொடுப்பார்களோயல்லாமல் எல்லாரும் பெற்றுப் பயிலும்படி அவ்வேட்டுச் சுவடிகளை எல்லார்க்கும் எளிதிறி கொடார். அல்லது அப்படிக் கொடுத்தாலுங்கூட ஓர் ஏட்டுச்சுவடியில் எழுதப்பட்டிருக்கும் ஒருநூலை ஒரேகாலத்திற் பற்பலர் எப்படி எடுத்துக் கற்கமுடியும்?
மேலுந் தமிழ்மொழியில் உள்ள சிறந்த நூல்கள் பலவும் ஓர் ஊரில் உள்ள கற்றவர் சிலரிடத்தில் ஒருங்கே காணப்படுவதும் இல்லை. ஓர் அருமையான நூலைக் காணவேணடுமானால் எத்தனையோ ஊர்களுக்குப்போய் அலைந்துதிரிந்து தேடிப் பார்க்கவேண்டும்; இப்படித் தேடித்திரிவதற்கு எவ்வளவு நாட்கள் செல்லும்! எவ்வளவு பொருள் செலவாகும்! எவ்வளவு பாடும் உழைப்பும் வேண்டும்! இத்தனை இடர்பாடுகள் இருந்தமையினாலேயே பழையகாலத்திற் கற்றவர் தொகை மிகுதியா யில்லை; கல்வி பரவவும் இல்லை; வளரவும் இல்லை; ஆனால், இக்காலத்திலோ வெள்ளைக்கார்ர் கண்டுபிடித்த அச்சுப்பொறிகளின் உதவியாற் பலவேறுநூல்களும் பலவேறு புதினத்தாள்களும் ஒவ்வொரு நொடியுங் கோடிகோடியாக அச்றிற்பதிக்கப்பட்டு உலகமெங்கும் பரவிக்கொண்டிருக்கின்றன. இதனால், எவ்வளவு ஏழையாயிருப்பவர்களுஞ் சிறிதுபொருள் செலவு செய்து தமக்கு வேண்டிய நூல்களை எளிதில் வாங்கிக் கற்றுக் கல்வியில் தேர்ச்சி பெறுகின்றார்கள். இதனாற் கல்வியானது எங்கும் பரவுகின்றது; கற்றவர் தொகை மிகுதி படுகின்றது; நாகரிகம் எங்கும் பெருகி எங்கும் அறிவுமணங் கமழ்ந்து இன்பஒளி வீசுகின்றது. இத்தனைப் பெரும்பேறுகளுங் காக்ஸட்ன (Caxton) என்னும் வெள்ளைக்கார அறிஞர் தமது பகுத்துணர்வினைப் பயன்படுத்தி அச்சுப்பொற்யைக் கண்டு பிடித்தமையால் விளைந்தவைகள் அல்லவோ?
இன்னும் இங்ஙனமே வெள்ளைக்கார துரைமக்கள அல்லும் பகலுந் தமது அறிவைச்செலுத்தி இதுகாறுங் கண்டுபிடித்திருக்கும் பொறிகளால் இதுகாறும் விளைந்த, விளைந்திருக்கின்ற நலங்கள அளவுக்கு அடங்கா. அவர்கள் இவ்வளவிலே ஓய்ந்துவிடாமல், இன்னுந் தமது உணர்வினைப் பலதுறைகளிற் செலுத்தி இன்னும் பல புதுமைகளை நாடோறுங் கண்டறிந்து வருதலால் இன்னும் உலகத்தில் உள்ள மக்களுக்கு வரப்போகும் நலங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன! அவையெல்லாம் இப்போது யாரால் அளவிட்டுச் சொல்ல முடியும்! ஆகவே, பகுத்துணர்ச்சியைப் பெற்ற மக்களாகிய நாம், விலங்கினங்களைப்போல் வீணே உண்டு உறங்கி இன்புற்றுக் காலங் கழித்தலிலேயே கருத்தைச் செலுத்திவிடாமல், இப் பகுத்துணர்ச்சியைப் பெற்ற நம்மிற் சிலர் அதனை மிக நன்றாய்ப் பயன்படுத்தி அதனாற் பல புதுமைகளையும் அவற்றால் பல சிறந்த இன்பங்களையுங் கண்டறிந்து, அவ்வாற்றால் தாமும் பயன்பெற்று மற்றையோரையும் பயன்படச் செய்து வருதல்போல, நாமும் அவ்வுணர்ச்சியினை மேலும், மேலும் பயன்படுத்தி இன்னும் மேலான இன்பங்களை அடையக் கடமைப்பட்டிருக்கின்றோம் அல்லமோ? ஆகையால், அடுத்த கட்டுரையில் மக்கட்பிறவியைப் பெற்ற நாம் நமது பகுத்துணர்ச்சியைக் கொண்டு இன்னும் அடையவேண்டிய ஒரு சிறந்த பொருளைப் பற்றிப் பேசுவோம்.
5. கல்வியுங் கைத்தொழிலும்
இத்துணைச் சிறந்த அறிவை எவரும் இயற்கையாகவே பெற்றுக்கொள்தல் இயலாது. ஏனென்றால், எல்லா உயிர்களி னறிவையும் அறியாமை என்னும் ஒரு பேரிருள் மறைத்துக் கொண்டிருக்கின்றது. இருளைப் போக்குதற்கு ஒளியினுதவி கட்டாயமாக வேண்டப்படுதல் போல், நமதறிவை மறைக்கும் அறியாமை இருளைப் போக்குதற்குங் கல்வியாகிய விளக்கம் இன்றி யமையாது வேண்டப்படுகிறது. கடல்வியில்லாதாரிற் சிலரும் அறிவுடையோராக இருக்க்க் காண்கின்றோமே யென்றால், அவர் அறிவுடையார் செய்யுஞ் சில அறிவுச் செயல்களைப் பார்த்தும், பழகியுஞ் சிறிது அறிவுடையராகக் காணப்படினும் அவர் போலியாகப் பெற்ற அச் சிற்றறிவை மேன்மேற் பெருகச் செய்தற்குக் கல்வியில்லாமையால் அவர் அறிவு பயனின்றாய்க் கழயும், இதுபற்றி யன்றோ தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார்,
”கல்லாதான் ஒட்பங் கழியநாள றாயினுங்
கொள்ளா ரறிவுடை யார்“
என்றருளிச்செய்தனர். மேலும் மக்களுக்கு விலங்கினங்களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றதோ அவ்வளவு வேறுபாடு கல்வியறிவு உடையவர்கட்கும், அஃதில்லாத வர்கட்கும் உண்டென்பது விளங்கத் திருவள்ளுவர் நாயனார்,
‘‘விலங்கொடு மக்க ளனவயர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்“
என்றருளிச் செய்திருக்கின்றனர். ஆகையால், கல்வியறிவு இல்லாதவர் அதிற்சிறந்து விளங்குவதும், அறிவிற் சிறந்த தொழில்களைச் செய்து முடிப்பதும் இயலா.
உடற் பாதுகாப்பின் பொருட்டு எத்தொழிலைச் செய்தாலுங், கல்வியின்றி அதனைச் செய்தலாகது. நம் நாட்டவர்களுக்கோ வயிறு வளர்ப்பதற்குச் சோறு கிடைத்தாற் போதுமென்றும், இப்பிறப்பில் அடையவேண்டிய இனபங்களைப் பெறுதற்கு ஏராளமான பொருளைத் தொகுத்துக்கொண்டாற் போதுமென்றுஞ் சொல்லிக் கல்வி கல்லாமல் அறியாமையிலேயே தமது காலத்தைக் கழித்து மாணடுபோகின்றர்! எல்லா அருளும் இரக்கமும் உடைய இறைவன் நமக்கு இந்தப் பிறவியைக் கொடுத்த்து வெறுஞ் சோறு தின்பதற்கும். பொருள் சேரப்பதற்குந்தானா? மற்றும் இந்த உடம்பை பாதுகாக்கு முகத்தால் அறிவை வளர்த்து அறியைமையைத் தொலைத்து அவனது பேரின்பத்தைப் பெறுதற்கன்றோ? இம்மை யின்பங்களைச் செவ்வையாயடைந்து மகிழ்ந்திருத்தற்குங் கல்வியறிவு கட்டாயம் வேண்டப்ப்டுவதாகும். உயர்ந்த கல்வியறிவில்லாதவன் எவ்வளவு பொருளைச் சேர்த்துவைத்தாலும் எவ்வளவு உணவுப் பண்டங்களைத் தொகுத்துக் கொண்டாலும் அவற்றை நுட்பமாய்த் துய்த்து மகிழும் வழி யறியாமையால் துன்பத்திலேயே கிடந்துயழன்று மாய்ந்து போவன். ஆகவே, இம்மையின்பத்தைப் பெறவேண்டுவார்க்குங் கல்வியறிவு முதன்மையாகு மென்பதை எல்லாருங் கருத்திற் பதித்தல் வேண்டும். ஆகவே, கைத்தொழிலையே பெரிதாக எண்ணி அதிற் புகுந்தவர்களுங் கல்வியறிவைப் பெறுதற்கு இடையறாது முயல்ல் வேண்டும்.
ஐரோப்பா முதலான அயல்நாடுகளி லுள்ள மேன் மக்களோ கல்வியறிவில்லாமல் எத்தைகய தொழிலையுஞ் செய்யமாட்டார்கள். அவர்களில் எந்த்த்தொழிலைச் செய்கின்றவர்களுங் கல்வியறிவிற் சிறந்தவராயே காணப்படுகின்றனர். அதனால், அவர்கள் நம்மனோர்க்கு நீண்டகாலம் பிடிக்கும் ஒரு கைத்தொழிலை மிகச் சுருங்கிய கலத்திற் சுருங்கிய செலவில் நேர்த்தியாகவுந் திறமையாகவஞ் செய்து முடிக்கின்றனர். கல்வியறிவில்லா நம்மனோர் தம்மை வருத்தியும், வாயற்ற மாடு. குதிரைகளை வருத்தியுஞ் செய்யும் ஒரு கைத்தொழிலை, ஐரோப்பிய நன்மக்கள் தமக்குள்ள கல்வியறிவால் அருமையான பொறிகளை (இயந்திரைங்களை) அமைத்து அவற்றினுதவியால், தமக்கும், பிற உயர்க்குந் துன்பமின்றி இனிது முடிக்கின்றனர். இன்னுமிவர்கள் தங்களுக்குள்ள கல்வியறிவின் மேன்மையால் நாளுக்குநாள் எல் முயற்சியிலும் பிறைபோல் வளர்ந்தோங்கி வருதலையும், அஃதில்லா நம்மனோர் அம்முயற்சிகளிற் குறைமதிபோல் தேய்ந்துபோதலையும் அறியார் யார்? ஆகையால், எத்தகைய முயற்சிகளிற் புகுவோரும் முதலிற் கல்வியறிவைப் பெறுதலிற் கருத்தூன்றக் கடவராக.
இனிக், கல்வியறிவின் உதவிகொண்டு செய்யப்படும் எல்லாக் கைத்தொழில் முயற்சிகளும் உழவு, நெசவு, வாணிகம் என்னும் மூன்று பகுதியிலே அடங்கும். அவற்றுள், உழவுத் தொழில் உடம்பைப் பாதுகாத்தற்கு முதன்மையான உணவுப்பொருள்களைத் தருவதொன் றாகையால் அது மற்றை யிரண்டிலுஞ் சிறந்த்தென்று ஆன்றோரால் உயர்த்து வைக்கப்படுவதாயிற்று. இவ்வுண்மை,
“சுழன்றும் ஏர்ப்பிள்ளை துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை“
என்று திருவள்ளுவ நாயனாரும்
“ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே – ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு“
என்று ஔவையாரும் அருளிச்செய்த மெய்ம்மொழிகளால் அறிந்துக்கொள்ளப்படும். இவ்வளவு சிறந்த்தொழிலை நம்நாட்டவர்கள் சிறிதுந் தாழ்வாக நினையாமல் அதனைப் பலவகையாலும் பயன் மிகத் தரும்படி மேன்மேற் பெருகச்செய்தல் வேண்டும். அமெரிக்கா. ஐரோப்பா முதலான நாடுகளிலுள்ள மேலோர்கள் நிலத்தை வளம்படுத்துதற்குரிய புதிய புதிய முறைகளைக் கையாண்டு காலத்திற்கேற்ற பயிர்களை விளைவித்து ஏராளமான தானியங்களையும், மற்றப் பண்டங்களையும், உணவப் பொருள்களையும் பெறுகின்றார்கள். மழை பெய்ய வேண்டுங் காலத்து மழை பெய்யாவிட்டாலும் அதனால் அவர்கள் கேடு உறாமல் மின் விளக்குகளின் உதவியினாலும், வேறுசில முறைகளினாலும் பயிர் பச்சைகளை விளைவித்துக் கொள்ளுகிறார்கள். நம் நாட்டவர்களோ என்றால், ஒரு மழை தவறினாலும், பயிர் பஞ்சத்திற்குள்ளாகி மிகவுந் துன்புறுகின்றார்கள். மேலும், பலபல பயிர்களின் தன்மைகட்கிசையப் பலதிறப்பட்ட எருக்களை அவர்கள் தறமையாகச் சேர்ப்பதுபோல, நம்மவர்க்குச் சேர்க்கத் தெரியாது. பயிர்கட்கு தக்கவாறு செவ்வையான எருச் சேர்க்க நம்மவர்களுங் கற்றுக் கொள்வார்களாயின் இப்போதடையும் ஊதியத்தினும் பதின்மடங்கு மிகுதியான ஊதியத்தைப் பெறுவார் களென்பதில் எட்டுணையும் ஐயமின்று; இங்ஙனமே பயிர்த்தொழிலில் அறியற்பாலனவாய் உள்ள நுட்பங்கள் எண்ணிறந்தன. இவை யெல்லாங் கல்வியறிவின்றி வரமாட்டா. ஆகையால், இவற்றைக் கல்வியறிவால் ஆராய்ந்தறிந்து உழவுத்தொழிலைச் சிறக்கச் செய்வார்களாயின் நம்வர்களும் நம் நாடும் மற்ற எல்லாரையும், எல்லா நாடுகளையும் விட மிகச் சிறந்து விளங்குமென்பது திண்ணம்.
இனி, உழவுத்தொழிலுக்கு அடுத்த நிலையில் அகத்தியமாகச் செயற்பாலது, நெய்தற் றொழிலே யாகும். நாகரிக வாழ்க்கையுள்ள எத்திறத்தவர்களுந் தமுடம்மை மறைத்தற்கு ஆடைகள் வேண்டி நிற்கின்றன ரல்லரோ? “ஆடையில்லா மனிதன் அரை மனிதன்“ என்ற பழமொழிப்படி மேலே துணியில்லாதவர் விலங்குகளினுந் தாழ்ந்தவராகக் கருதப்படுவர். விலங்கினங்கட்காயினும், மேற்போர்வை போன்ற மயிர்க்கற்றைகளுங், குறைகளை மறைத்தற்கு வாற்புறங்களுங் கடவுளருளால் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மக்களோ பகுத்தறிவு உடையவராயிருத்தலால் அவர்கட்கு அவற்றைக் கொடுத்திலர். அவர்கள் தமதறிவுகொண்டு ஆடை நெய்து உடுக்க வேண்டியவர்களாயிருக்கின்றார்கள். உடம்பைப் பாதுகாத்தற்கு இன்றியமையாச் சிறப்பனிதான உணவைத் தருதல் பற்றி உழவுத் தொழில் எல்லாத் தொழிலிலும் மேலானதென்று சொல்லப்படினுந், தீவினை ஒரு சிறிதுமில்லாத தொழில் எதுவென்று ஆராயுமிடத்து, அது நெய்தற்றொழிலாகவே யிருத்தலால், அவ்வகையில் அஃது உழவுத்தொழிலிலும் மேலானதென்றே கொள்ளப்படும். இதுபற்றியன்றோ, தெய்வப் புலமை திருவள்ளுவநாயனார் உழவுத்தொழிலையே சிறப்பித்துக் கூறினாராயினும், தாம் நெய்தற் றொழிலையே செய்து கொண்டு உயிர் வாழ்ந்தனர். உழவு செய்யுங்காலி சிற்றுயிர்கள் சில பல மாளுதலின், அதிற் சிறிது தீவினை உண்டென்றும், நெய்தற் றொழிலில் ஓருயிர்க்குத் தீங்கின்மையின் அதிற் சிறிதுந் தீவினை யில்லையென்றும் அறிதல் வேண்டும். இத்துணைச் சிறந்த நெய்தற் றொழிலை அயல்நாட்டவர்கள் வியப்பான பல பொறிகளைமைத்து நிரம்பத் திறமாக நடத்தி அளவறிந்த ஊதியத்தை எய்த, நம்நாட்டவர்களோ, கல்வியறிவின்மையால் இதில் மிகவும் பிற்பட்ட நிலையினை யடைந்து ஏழைகளா யிருக்கின்றார்கள். இனியாயினும், அவர்கள் அங்கனங் கல்வியை இகழ்ந்திராது, அதனை தாமுங் கற்றுத் தம்மக்கட்கும் நன்கு கற்பித்து நெய்தற்றொழிலைச் செவ்வையாய் நடத்தி வாழ்வாராக.
இனி, உழவுத்தொழிலானும், நெய்தற்றொழிலானும் உண்டாக்கிய பொருள்களை ஒன்றற் கொன்று தொலைவாகவுள்ள பற்பல நாடுகளிலும் உள்ள மக்கட்குப் பயன்படும்படி சேர்பித்தற்கு வாணிகமானது மிகவும் உதவி செய்வதாகும். இத்தொழில் நடைபெறாதானால் எல்லாரும் எல்லாப் பொருளையும் பெற்று இன்புற்று வாழல் முடியாது. எந்தெந்த நாட்டில் எந்தெந்த பொருட்கள் நயமாய்க் கிடைக்கு மென்பதை ஆராய்ந்தறிந்து, அவற்றை ஓரிடத்திற் றொகுத்துப் பலர்க்கும் பயன்படுத்தி தாமும் பயனடைதற்குக் கல்வியறிவு கட்டாயம் வேண்டப்படும். வாணிகம் நடாத்துவார்க்குக் கல்வியறிவு அகத்தியமாய் வேண்டப்படுமென்பதை உணர்ந்த அயல்நாட்டவர்கள் கல்வியில்லாதவர்களாய்க் காலங் கழக்கின்றனர். இவர்களில் எவ்வளவு பணம் படைத்தவர்களாயிருந்தாலும், இவர்களைக் கல்வியறிவில் சிறந்த அயல்நாட்டு வாணிகர்கள் ஒரு பொருட்படுத்துவதே இல்லை. இங்ஙனாதாங் கல்வியறிவுடைய பிறரால் இகழப்படுதல் உணர்ந்தாயினும், இனிமேல், தாமுந், தம் மக்களுந், தம்மினத்வருங் கல்வியில் மேம்பட்டு விளங்க முயன்று, அதனால் வாணிக வாழ்க்கையை எல்லாரும் புகழும்படி நடாத்திச் சிறப்பெய்துவாராக!
6, கல்வியே அழியாச் செல்வம்
“வெள்ளத்தால் அழியாதுவெந் தழலால்
வேகாது வேந்தராலுங்
கொள்ளத்தான்முடியாது கொடுத்தாலும்
நிறைவன்றிக் குறைவுறாது
கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கோ
மிக எளிது கல்வியென்னும்
உள்ளத்தே பொருளிருக்கப் புறம்பாகப்
பொருள்தேடி யுழல்கின்றாரே“
சில நாளில் தோன்றிச் சிலநாளிலிருந்து சிலநாளில் மறைந்து போவதாகிய இம் மக்களுடம்பிற் பிறந்தவர்களான நாம் எந்தவகையான செல்வத்தைப் பெறுதற்கு முயலல் வேண்டுமென்றால், என்றும அழியாத்தாய், நம் உடம்பு அழிந்தாலுந் தான அழியாமல் நமது உயிரோடுசேர்ந்து நம்மை எல்லாப் பிறப்புக்களிலிலுந் தொடர்ந்து வருவதாய் உள்ள அழிவில்லாப் பெருஞ் செல்வத்தையே அடைதற்குக் கண்ணுங்கருத்துமாய் இருக்கவேண்டும். ஏன்? அழியாத செல்வத்தையே பெறவேண்டு மென்னும் விருப்பம் நம்மில் ஒவ்வொருவரிடத்தும் இயற்கையாகவே காணப்ப்டுவதாலும், அவ் விருப்பம் இல்லாதவர்களை எவ்விடத்தும் எக்காலத்துங் காண்டல் கூடாமையொனுமென்க. ஒரு திங்கள், இரண்டு திங்களிற்கிழந்து போகுஞ் சீமைத்துணிகளை வாங்க விரும்புகின்றோமோ? பன்னிரண்டு பதினைந்து திங்கள் கிழியாமல் அழுத்தமாயிருக்கும் நாட்டுப் புடவைகளை வாங்க விரும்புகின்றோமா? விலை சிறிது மிகுதியாய் இருந்தாலும் அழுத்தமாய் நீடித்திருக்கும் ஆடைகளை யல்லவோ வாங்க ஆவல்கொள்கின்றோம்? சிறிது கைதவறினாலுங் கீழ்விழுந்த நொறுங்கிப் போகும் மட்பாண்டங்களைப் புழங்க விரும்புகின்றோமோ? புழங்க விரும்புகின்றோமோ? கீழே தவறி விழுந்தாலும உடையாமல் வலுவாய் உள்ள செப்புக் கவங்கள் பித்தளைக் கலங்களைக் கையாள விரும்புகின்றோமா? விலை ஏறியிருந்தாலுங் நீண்டநாட் பயன்படுஞ் செப்புக்கலங்கள பித்தளைக் கலங்களை யல்லவோ பொருள் கொடுத்து வாங்க விழைகின்றோம்? இங்ஙனமே நாம் நாடோறுங் கையாண்டு வரும் பொருள்களிலும் கூட விரைவில அழிந்துபோகாமல் நீண்டநாள் நிலைத்திருக்கும் பொருள்களையே நாம் அடைய விரும்புதலால், நம்மில் ஒவ்வொருவருக்கும் அழியாச் செல்வத்தையே பெறவேண்டுமென்னும் அவா இயற்டிகயாகவே வேரூன்றி நிற்கின்றது.
இங்ஙனம் அழியாச் செல்வத்தையே அடைய வேண்டுமென்னும் அவா நம்மெல்லா ரிடத்தும் இயற்கையாக இருந்தாலும், முத்துச்சிப்பியி லுள்ள முத்தின் ஒளியும், பாசி மூடிய பவளத்தின் நிறமும், மாசியில் மறைந்த மதியின் துலக்கமுங், கூடை கவிழ்ந்த விளக்கின் ஒளியும்போல் நம்மை மூடிக்கொண்டிருக்கும் அறியாமை என்னும் இருளில் அகப்பட்டவர்களாகி நம் அறிவை இழந்து, அழியாச்செல்வத்தை அடைய முடியாமல், நிலையின்றி அழிந்து போகும் பொருள்களையே நிலையாகப் பிழைபட நினைந்து, அவற்றைப் பெறுவதிலும அவற்றை நுகர்வதிலுமே நமது காலத்தைக் கழித்து வருகின்றோம். பாருங்கள்! நம்மவர்களிற் பெரும்பாலார் மாடமாளிகைகளையும் ஆடை அணகலன்களையுந் தட்டுமுட்டுகளையுந் தின்பண்டங்களையும் நாடகக்காட்சிகளையும் வேடிக்கை விளையாட்டுகளையுமே மேலான செல்வங்களாக்கக் கருதி அவற்றைப் பெறுவதிலும் அவற்றை நுகர்வதிலும் விடாமுயற்சி யுடைவர்களாய் இருக்க்க் காண்கின்றோமே யல்லாமற், சிறிதுநேர மாயினும் அடக்க ஒடுக்கத்தோ டிருந்து நம்மைப் படைத்த சிவபெருமானை நினைக்கவும், நம்மைப்போலவே அவ்வாண்டவனாற் படைக்கப்பட்ட உயிர்களின் நன்மையைக் கருதவும், அவை பசியாலும் நோயாலும் வருந்துவதைக் கண்டு மனங்கசிந்து இரங்கித் தம்மால் இயன்றி அளவு அவற்றிற்கு ஒரு கைப்பிடி உணவாவது ஒருகாசு மருந்தாவது உதவி அவற்றின் துன்பத்தைப்போக்கவுந்,தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் ஔவைப் பிராட்டியார் காரைக்கால் அம்மையார் சேக்கிழார் பெருமான் முதலான உயர்ந்த அறிவுடையோரால் அருளிச்செய்யப்பட்டுள்ள அரும்பெரு நூல்களை ஓதி உணரவும் முயற்சி வாய்ந்தவர்களாய் உள்ள ஆண்பெண்பாலரைக் காண்பது அரிதினும் அரிதாய்ப் போய்விட்டதே!
ஆ! நாம் நிலையாக நினைந்த மாடமாளிகைகள் ஆடை அணிகலன்கள் தட்டுமுட்டுகள் முதலானவைகள் எல்லாம் நாம் நினைந்தவண்ணம் நிலையாக இருப்பவைதாமா? இல்லை, இல்லை. சில ஆண்டுகளுக்குமுன் ஐதராபாக்கத்திலும் வாணியம்பாடியிலும் நேர்ந்த பெரியதொரு வெள்ளப் பெருக்கினால் எத்தனை வீடுகள் எத்தனை மாளிகைகள் நிலமட்டமாகத் துடைக்கப்பட்டு இருந்த இடமுந் தெரியாமல் அழிந்துபோயின! அவ்வீடுகளோடு அவ்வீடுகளில் இருந்த எவ்வளவு பண்டங்கள் எவ்வளவு ஆடை அணகலன்கள் அழிந்து ஒழிந்துபோயின! அப்போது அங்கே பெருஞ் செல்வர்களா யிருந்தவர்களெல்லாந் தம்மால் அருவருந்து ஒதுக்கப்பட்ட ஏழைக் குடிமக்களைக் காட்டிலும் இழிந்திநிலையை அடைந்தவர்களாகி, உண்ணச் சோறும் உடுக்கத் துணியும் இன்றித் தத்தளித்த தெல்லாம் நாம் கேட்டு நெஞ்சம் நெக்குருகி வருந்தினம் அல்லமோ? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எட்டாம் ஆண்டில் மேற்குத்திசையில் உள்ள சிறந்த நகரமாகிய மெசினாப் பட்டினமானது நில அதிர்ச்சியினால் அழிந்து நீருக்கும் நெருப்புக்கும் இரையானதும், அப்போது அப்பட்டினத்திலிருந்த ஐந்தடுக்கு ஆறடுக்கு மாளிகைகளும், அவற்றில் இருந்த அரியபெரிய பண்டங்களும், அவற்றில் இருந்த நூறாயிரக்கணக்கான மாந்தர்களும், அளவற்ற செல்வங்களும் நெருப்பில் வெந்து நீரில் அமிழ்ந்திப்போன வரலாறுகளை யெல்லாம் நினைக்கும் போது, நாம் நிலையாக நினைத்திருக்குஞ் செல்வங்களுஞ் செல்வங்களென்று காணப்படுமா? அவற்றை மதிக்கும் நமது அறிவும் அறிவென்று சொல்லப்படுமா?
சில நாங்களின்முன் மேற்கேயுள்ள ஐரோப்பாக் கண்டத்தில் நடைபெற்ற வெள்ளைக்கார்ர் சண்டையினால் விளைந்த அழிவினை, ஐயோ! என் ஒரு நாவினால் எங்ஙனஞ் சொல்வேன்! எங்கே பார்த்தாலுஞ் செக்கச் செவேலென்ற செந்நீர்க் களரியும், பிணக்காடும், பீரங்கி வெடியுங் கூக்குரல் ஒலியுமாய் இருந்தனவே! அத் தேயங்களிலுள்ள பத்துப் பதினைந்து மாடமாளிகைகளுக்குந் தேவகோட்டங்களுக்கும் நமது சென்னபட்டினம முழுதும் ஈடாக வைத்தாலும், ஈது அவற்றிற்கு ஒவ்வாதே! அப்படிப்பட்ட உயர்ந்த கட்டிடங்களெல்லாம் பீரங்கி வெடிகளால் தகர்க்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கின்றன! எத்தனை அரசர்கள்! எத்னை செல்வர்கள்! எத்தனை போர்வீரர்கள்! இச் சண்டையில் மாய்ந்து போனார்கள்! நேற்று ஆடை யணிகலன்கள் அணிந்து அறுசுவை யுணவு உண்டு தம்மை மறந்து அகங்களித்திருந்தவர்களெல்லாரும் இன்று அவற்றை முற்றும் இழந்து மனைவி யொருபுறம் மக்கள் ஒருபுறமாய்க் கையறுந்து காலறுந்து கதறினரே! ஐயகோ! இச் சண்டையினால் நேர்ந்துவந்த அழிவுகளை அறிந்து வைத்தும், இன்னும் நாம் இவ்வெளி ஆரவாரங்களைச் செல்வங்க ளென்று எண்ணலாமா? இதுபற்றியன்றோ,
“தெய்வச் சிதம்பரத்தேவா உன்சித்தந்
திரும்பி விட்டாற்
பொய்வைத்த சொப்பனமாம் மன்னார்வாழ்வும்
புவியுமெங்கே
மெய்வைத்த செல்வமெங்கே மண்டலீ கர்தம்
மேடையெங்கே
கைவைத்தநாடகசாலை யெங்கே
யிதுகண்மயக்கே“
என்று பட்டினத்துப் பிள்ளையாரும் அருளிச்செய்தார்?
இங்ஙனம் வெள்ளத்தால் அழிந்துபோவதுத் வெந்நெருப்பால் வெந்நெருப்பால் வெந்துபோவதும் அரசர்களாற் கைப்பற்றப்படுவதுங் கொடுக்கக் கொடுக்கக் குறைந்து போவதுங் கள்வர்க்காக நம்மை அஞ்சுவிப்பதும் பாதுகாப்பதற்கு மிகுந்த வருத்த்த்தைத் தருவதமான இச் செல்வம் நம்மால் எந்நேரமும் விரும்பத்தக்கதன்றென்பது இதனால் இனிது விளங்குகின்றதன்றோ? இவ்வாறு சொல்லுதலைக் கொண்டு நாம் செல்வத்தை வேண்டாமல் வறுமைபட்டு இந்த மண்ணுலகில் வருந்தியே காலங்கழிக்கவேண்டு மென்று நீங்கள் நினைத்தல் கூடாது. நமது மண்ணுலகவாழ்க்கை இனிது நடப்பதற்கும், பிற உயிர்களின் துன்பத்தைப்போக்கும் ஈகை அறங்களைச் செய்வதறகும், மற்ற நல்ல முயற்சிகளைச் செய்வதற்கும் இன்றியமையாது வேண்டப்படும் பொருளைச் சேர்த்து, ஆரவாரம் இல்லாமலும், எல்லாந் தனக்கே என்று எண்ணாமலுந் தனக்கும் பிறர்க்கும் பல்வகையால் நல்ல பயன்கள் விளையும்படி அதனைப் பயன்படுத்தல் வேண்டுமென்பதே எனது கருத்தாகும்.
இன்னும், இவ்வழிந்துபோகும் பொருளைப் படைத்தவர்களும் படையாதவர்களுமாகிய எல்லாரும் வெள்ளத்தால் அழியாதாய் வெந்தழலால் வேகாதாய் அரசர்களாலுங் கைப்பற்றப்படாதாய்க் கொடுக்கக் கொடுக்கக் குறையாதாய்க் கள்வர்களுக்காக அஞ்வ வேண்டுவது இல்லாதாய் நமது அறிவினுள்ளே இருத்தலாற் பாதுகாப்பதற்கு எளிதாய் விளங்கும் அழியாச் செல்வமாகிய கல்விப்பொருளைப் பெறுதற்கு மிகவும் முயற்சியுடையவர்களாய் இருக்க வேண்டும்; இதுபற்றியே, “வெள்ளத்தால் அழியாது“ என்னும் அரிய பாட்டு இந்தக் கட்டுரைக்கு முதலாக எடுத்துக்கொள்ளப்பட்டது. செல்வமானது வெளியேயுள்ள பருப்பொரு ளாதலால் வெள்ளத்தால் அழியும் வெந்தழலால் வேகும்; கல்வியானது வெள்ளத்தால் அழியும் வெந்தழலால் வேகும்; கல்வியானது நமது உரைப்பற்றி உள்ளே யிருக்கும் நுண்பொருளாகையால் வெள்ளத்தின் அழியாது வெந்தழிலில் வேகாது; செல்வமானது பொன் நிலம் வீடு முதலிய பருப்பொருளாயிருத்தலால் அரசர்களாற் கைப்பற்றவும் படும், கல்வியானது அறிவுருவான நுண்பொரு ளாகையால் அவர்களாற் கவரப்பட மாட்டாது; செல்வமானது பிறர்க்கு எடுத்துக் கொடுக்கக் கொடுக்கக் குறைந்துபோகும், கல்வியானது பிறர்க்கு எடுத்துச் சொல்லச்சொல்ல அளவில்லாமற் பெருகும். செல்வத்தை வைத்திருப்பவர்கள் எங்கே கள்வர் வந்து திருடிக்கொண்டு நம்மையுங் கொன்றுவிடுவார்களோ என்று எந்நேரமும் அச்சத்திலேயே காலங்கழிக்க வேண்டும். கல்வியை வைத்திருக்கும் புலவர்களோ அங்ஙனங் கள்வர்க்குச் சிறிதும் அஞ்ச வேண்டுவதில்லை; செல்வத்தைப் பாதுகாப்பதற்கு அளவு கடந்த முயற்சி வேண்டும், கல்வியைப் பாதுகாப்பதற்கு அத்தகைய வருத்தம் வேண்டுவதில்லை. இங்ஙனமெல்லாங் கல்வியானது செல்வத்தினுஞ் சிறப்புடைய அழியாச் செல்வமாய இருத்தலினாலேயே தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார்,
“கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றுப் பிற“
என்றும், ஔவைப் பிராட்டியார்,
“மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னிற்கற்றோன் சிறப்புடையன் – மன்ன்னுக்குத்
தன்றே சமல்லாற்சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றவிட மெல்லாஞ் சிறப்பு“
என்றும் அருளிச் செய்தனர்.
ஆனாற் சிலர் கல்வியானது ஆண்மக்களுக்குத்தான் வேண்டுமே யல்லாமற் பெண்மக்களுக்கு வேண்டுவதில்லையென்றும், பழைய நாளில் மாதர்கள் எவருங் கல்வி கற்கவில்லை யென்றும், பெண்கள் கல்விகற்க வேண்டுமென்று நூல்களிற் சொல்லப்படவில்லை யென்றுங் கூறுவார்கள். உயிர்க்ள என்ற பொதுவகையில் விலங்குகளும் மக்களும் ஒப்பவர்களே யாவர்; உணவு தேடுதல், தேடிய உணவை உண்டல், உறங்கல், இன்புறுதல் என்னுந் தொழில்கள் விலங்குகளுக்கும் உண்டு, மக்களுக்கும் உண்டு; ஆனால், மக்கள் விலங்குகளினும் உயர்ந்தவர்கள் என்று சொல்வது ஏன் என்றால், நல்லது இது தீயது இது என்று பகுத்துணர்தலானுந், தம்மைப்போன்ற உயிர்க்கு இரங்கித் தம்மாலான உதவி செய்தலானுங், கடவுளைத் தொழுதலானும், இங்ஙனமெல்லாந் தமது அறிவை வளரச் செய்தற்குரிய பலநூல்களைக் கற்றலானுமே மக்கள் விலங்குகளினும் உயர்ந்தவராக எண்ணப்படுகின்றனர். இவ்வுயர்ந்த அறிவின்செயல்கள் இல்லையானால் விலங்குகளுக்கு மக்களுக்குஞ் சிறிதும் வேற்றுமை இல்லாமற்போம். கல்வி இல்லாதவர்கள் விலங்குகளேயாவர் என்றுங், கல்வியில்லாதவர்க்ளுக்கு நுட்பமான அறிவு சிற்சில நேரங்களிற் காணப்பட்டாலும் அதனை அறிவாகப் பெரியோர்கள் கொள்ளமாட்டார்களென்றுங், கல்வியுடையவர்களே கண்ணுடையவர்கள் ஆவார்கள் அல்லாமல் மற்றவர்கள் முகத்தில் இரண்டு புண்ணுடையவர்களே ஆவார்களென்றும் விளக்குதற் கன்றோ திருவள்ளுவநாயனார்,
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்“
எனவும்,
“கல்லாதான் ஒட்பங் கழிய நன்றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்“
எனவும்,
“கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்“
இங்ஙனம் அறிவான்மிக்க ஆன்றோர், மக்களாய்ப் பிறந்த எல்லார்க்குங் கல்வி இன்றியமையாது வேண்டற் பாலதேயாமென்று கூறியிருக்க, அஃது ஆண்மக்களுக்குத் தான் வேண்டுமே யல்லாமற் பெண் மக்களுக்கு வேண்டுவதில்லை யென்று உரைப்போர் உண்மை அறிந்தாராவரோ சொல்லுமின்கள்! அருமைத் தாய்மார்களே, பெண்பாலார் மக்களினுந் தாழ்ந்த விலங்குகாள யிருந்தாலன்றோ அவர்கட்குக் கல்வி வேண்டாம் என்னலாம்? இவ் வுலகவாழ்க்கையை நன்றாக நடத்தும் முறையில் ஆண்மக்க்ளைக்காட்டிலும் மிகுந்த பொறுமையும் ஆழ்ந்த நுண்ணறிவும் வேண்டிய அவர்கட்குக் கல்வியென்னுந் தூண்டா மணிவிளக்கைத் தராமல் அவர்களை அறியாமை என்னும் பேர்இருளிற் போகச் சொல்லுபவர்கள் உண்மை அறிந்தாராவரோ சொன்மின்கள்!
இனி, முற்காலத்திருந்த ஔவையார், பூதப் பாண்டியன் பெருந்தேவியார், காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார் முதலான பெண்மணிகளெல்லாருங் கல்வியில் மிகச் சிறந்தவர்களா யிருந்தமை தெரிந்தவர் பழைய நாளிற் பெண்மக்கள் எவருங் கல்வி கற்கவில்லை யென்று கூறுவரோ சொன்மின்கள்!
“பெருந் தடங்கட் பிறை நுதலார்க் கெலாம்
பொருந்து செல்வமுங் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும்
விருந்துமன்றி விளைவன யாவையே“
என்று கல்வியிற் சிறந்த கம்பர் கூறியிருத்தலால் முற்காலத்தில் இருந்த பெண்மக்கள் எல்லாருங் கல்வியில் வல்லவர்காளய் இருந்தார்களென்பது இனிது விளங்கவில்லையா?
இனிப், பெண்பாலார்க்கு ஆடை அணிகலன்கள் முதலான ஒப்பனைகள் அவரவர் அளவுக்குத் தக்கபடி சிறிது சிறிது வேண்டுவதேயாயினுங், கல்வி யில்லாதவர்களுக்கு இவ் வாடை யணிகலர்களால் உண்டாகும் அழகு அழகாகமாட்டாதாகும் என்னுங் கருத்தொடு,
“குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம் யாமென்னும் நடுவு நிலைமையாற்
கல்வி யழகே யழகு“
என்று நாலடியாரென்னும் மிகவும் பழமையான உயர்ந்தநூலிற் கூறியிருப்பதை உணர்பவர்கள் பெண்மக்களுக்குக் கல்வி வேண்டாமென்று சொல்லத் துணிவரோ கூறுமின் தாய்மார்களே!
இனி, இங்ஙனமெல்லாம் ஆழ நினைந்து பார்க்குங்கால் ஆண் மக்களுக்குக் கல்வி இன்றி யமையாததாய் இருத்தல் போலவே, அவர்போல் மக்கட் பிறப்பினரான பெண்மக்கட்குங் கல்வியானது இன்றியமையாத அழிவில் செல்வமாகுமென்பது நன்கு பெறப்படுகின்றது.
இனி, அழியாச் செல்வமாகிய கல்வியை பெற்றுக் கொள்வதற்கு நாம் மிகவும் முயன்று வருவதோடு, உயர்ந்த நூல்களைக் கற்று வரும்போதே அந் நுல்களிற் சொல்லப்பட்ட நல்லொழுக்கங்களிலும் நாம் பழகி வருதல் வேண்டும். ”கற்ற்றிவார் கண்டது அடக்கம் அடங்காதார், பொச்சாந்துந் தம்மைப் புகழ்ந்துரைப்பர்“ என்றபடி நாம் சிறிதும் பெருமை பாராட்டாமலுஞ், செருக்கு அடையாமலும் பணிந்த சொல்லும் பணிந்த செயலும் உடையமாய், எல்லா உயிர்களிடத்தும் அன்பும் இரக்கமுங்காட்டி, நல்லொழுக்கத்தில் வழுவாது எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளான சிவபெருமானை மனமொழி மெய்களால் நினைந்தும் வாழ்த்தியும் வணங்கியும் உலகவாழ்க்கையை இனிது நடாத்தி நாமும் பயன்பெற்றுப் பிற உயிர்களையும் பயன் பெறச் செய்து வருதலே நாம் பெற்ற அழியாச் செல்வமாகிய கல்வியைப் பயன்படுத்தும் முறையாகும். இன்னுஞ்,
“யாவர்க்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே“
என்னுந் திருமூலநாயனார் திருவாக்கை இடையறாது நம் நினைவில் வைத்து, நம்முள் அவரவர் செயலுக்குத் தக்கபடி இறைவனை வணங்கியும், ஆவினைப் பாதுகாத்தும், ஈகை அறங்கள செய்தும், எல்லாரிடத்தும் இன்சொற் பேசியும் ஒழுகுதலே அழியாச் செல்வமாகிய கல்வியாலாய பயனாகும்.
7. அறிவுநூற் கல்வி
அதுபோலவே, அறிவுநூற் கல்வியைப் பெறுதற் பொருட்டாகவே வந்த இம்மக்கள் யாக்கையி லிருந்தும், முடிவாக அதனை அடைதற்கு முயலாமல் உலகநூற் கல்வியளவில் ஒருவன் நின்று விடுவனானால், அவனெடுத்த இம் மக்கட்பிறவி வெறும் பாழேயாவது திண்ணம் உயிரானது தன்கண் உள்ள அறியாமை முற்றுந் தொலையப் பெற்றுப் பேரறிவு விளக்கம் உடையதானவுடனே பிறவி எடுத்தலும் நின்றுபோகும். உயிர்கட்கு உடம்புகள் அடுத்தடுத்து வருவதெல்லாம் அவ் வுயிர்களைக் கவிந்து நின்ற அறியாமையை நீக்கி அறிவை எழுப்புதற் பொருட்டாகவே யாகலான், அறியாமை தேய்ந்து அறிவு எழும் வரையில் அவை பிறவிகளிற் சுற்றிச்சுற்றி வரும். ஆகவே, அறிவுநூல்களைக்கற்று அறியாமையை நீக்காதவன் மேன்மேற் பிறவியெடுப்பவனாய் இருத்தலின், அவன தனக்கு உடம்புகளைப் படைத்துக் கொடுப்பதான ஓயாத வேலையைக் கடவுளுக்குத் தருபவன ஆவன்; இது குறித்தன்றோ பட்டினத்தடிகளும்,
“மாதாஉடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன
தேவாவுங் கைசலித்து விட்டானே – நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னைக்
கருப்பையூர் வாராமைக் கா“
என்று அருளிச்செய்தனர்.
மேலும், உயிர்க்கு உறுதிதரும் அறிவுநூற் கல்வியைக் கல்லாது, உடம்பைப் பாதுகாத்தற்குமட்டும் பயன்படும் உலகநூற் கல்வியைப் பயில்வது வெறுங் கூஹவுதலாகவே முடியும். ஏனென்றால், நிலையாயுள்ள உயிரின் நன்மையை நாடாது, நிலையின்றிச் சில நாளிலோ சில திங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ மறைந்து போகும் உடம்புக்கு உணவு தேடிக் கொடுத்தற்கு மட்டும் பயன்படுகின்ற உலகநூற் கல்வியை வாய்ஓயாது கூலிக் கற்றல் நிலையான பயனைத் தராமையின் அது வெற்றொலியோய்ப் போவதன்றி வேறு அது தரும் பேறு என்னை? இவ்வுண்மையை உணர்த்துகற்கன்றே,
அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா
துலகந்நூல் ஓதுவதெல்லாங் கொண்டு தடுமாற்றம்
கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்
போஒந் துணையறிவார் இல்“
என்று நாலடியார் கூறுவதாயிற்று.
இனி, அறிவுநூற்கல்வியைப் பெற்றவர் மறுமையில் இன்பத்தை அடைவரென்று பலருங் கூறுக் காண்கின்றோமேயல்லாமல், இம்மையில் மற்றவர்க்கில்லாத சிறப்பினைப் பெறக் காண்கின்றோம் இல்லையே; எல்லாரும் உண்டு உடுத்து உறங்கிச் சாதல்போலவே அவரும் உண்டுடுத் துறங்கிச் சாகின்றனர்; இன்னும் நன்றாக ஆராய்ந்து பார்க்குங்கால் உலகநூற் கல்வியில் மிக்கவர்களே இம்மையில் எல்லாச் சீருஞ் சிறப்பும் இன்பமும் பெறுகின்றனர் கட்புலனுக்கும் நமது நினைவுக்கும் எட்டாத மறுமையில் இன்பத்தை அடையலாமென நினைந்து அறிவுநூற் கல்வியிற் காலத்தைக் கழிப்பவர் கடைசியில் ஏமாறி இறப்பதற்கே இடமாகிறதென்று அதனை இழித்துக் கூறுவாரே பலர். என்றாலும், அறிவின் ஏற்றத்தாழ்வுகைளச் செவ்வையாக ஆராய்ந்துபார்த்தால், அறிவுநூற் கல்வியால் வருஞ் சிறப்பும் இன்பமும் வேறெதனாலும் வரமாட்டா என்பது நன்கு புலப்படும்.
எங்ஙனமென்றால், உலகத்தின்கண் எத்தகைய அரும்பெருந் தொழில்கள் நடைபெறுதற்கும் அறிவும் அறிவுமுயற்சியுங் கட்டாயமாய் வேண்டியிருக்கின்றன. அறிவில்லாமல் எந்த்த் தொழிலையுஞ் செய்தல் முடியாது, எந்த நலத்தையும் அடைதல் இயலாது. அறிவில்லாதவர்களும் அறிவுடையாரைக்கண்டால் அவர்க்குச் சிறப்புச் செய்த பணிகின்றனர்; அவரை விரும்புகின்றர். ஒருவர் பலருதவி கொண்டு ஓர் அரிய பெரிய முயற்சியை நடைபெறுவக்குங்கால், அம்முயற்சி அறிவில்லாதவர் செய்கையால் முட்டுப்படுதல் கண்டு எவ்வளவு வருந்தி அவரை வெறுக்கின்றனர்! அப்போது அறிவுடையான் ஒருவன மற்றையோர் செய்த பிழைகளை யெல்லாந் திருத்தி அதனைச் செவ்விதாக்கி முடிக்குங்கால் அதனைக்கண்டு வியந்து அவன்மேல் எவ்வளவு உவப்படைந்து அவனை விரும்புகின்றனர்! இங்ஙனமே மிகச் சிறிய முயற்சிமுதல் மிகப்பெரிய முயற்சி ஈறாக அறிவில்லாதவர் செய்வன பெரிதும் பிழைபட்டுத் துன்பத்தைத் தருதலும், அறிவுடையார் செய்வன பெரிதுந் திருத்துமுற்று இன்பத்தைத் தருதலுஞ் சிறிதேனும் ஆழ்ந்து நினைப்பார்க்கு விளங்காமற் போகா. இதுபற்றியன்றோ தெய்வப்பலமைத் திருவள்ளுவ நாயனார்
“ அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார்
என்உடைய ரேனும் இலர்“
என்று அருளிச் செய்தனர்.
இனி, இத்துணைச் சிறந்த அறிவங் கல்வியாலன்றி உண்டாகாது. கல்வியில்லதாரிலும் அறிவால் முற்பிறவிகளிற் பயின்ற கல்வியின் பயனாலேயே அங்ஙனம் அறிவு கூடப் பெறுகின்றனர். அங்ஙனக் கூடப்பெற்ற அறிவும் இப்பிறவியில் மேலுமேலுங் கல்வியாற் பணப்டுத்தப் பட்டாலன்றி, அது பாசி மூடிய பளிக்குமணிபோல் திரும்பவும் அறியாமையால் அகப்பட்டு கல்வியில்லாதவன் எவ்வளவு உயர்ந்த அறிவு கூறினாலும், அதனை அறிவால் நிறைந்தோர் ஏற்றுக் கொள்ளமாட்டார். இது,
“கல்லாதான் ஒட்பங் கழியநான் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்“
என்று திருக்குறளுங் கூறுகின்றது.
இனிக், கல்வியுள்ளும் உலகநூற்கல்வி நிலையில்த பொருள்களையே உணர்த்துவதால், அதனால் விளையும் அறிவும் நிலையில்லாத இயல்பினதாய் நிலையான இன்பத்தைத் தரமாட்டாதாய் ஒழயும். அறிவுநூற் கல்வியோ, உலகநிலை, உயிரின்நிலை, உயிரோடு ஒன்றாய் நிற்கும் அறியாமையின் நிலை, இருவினைத் தோற்றம், உயிர் மூவகைக் குற்றமும் நீங்கும் வகை, முழுமுதற் கடவுளின் இயல்பு, அது செய்யும் உதவி, அதனோடொன்றாயிருந்து இம்மை மறுமை இரண்டிலும் நுகரும் இன்பநிலை முதலானவற்றை ஆராயும் உயர்ந்த ஆராய்ச்சியில் அறிவைத் தோயவைத்து, அவ் வழியால் அதனைத் தூயதாக்கிப், பேரொளியோடு துலங்கவைத்தலின், அறிவுநூற் கல்விகற்றார்முன் உலகநூற் கல்விமட்டும் உடையார் விலங்கினம்போல் எண்ணப்படுவர். இவ்வுண்மை,
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்“
என்ற தெய்வத் திருவள்ளுவர் திருக்குறளால் நன்கு அறியப்படும்; இத்திருக்குறளில் ‘இலங்குநூல்‘ என்றது அறிவுநூலேயாம். வெளிப்பார்வை யளவில் உயிர்கள் எல்லாம் ஒத்த செயலும் மாறுதலும் உடையனபோற் காணப்படினும், நுணுகி ஆராய்ந்தால் அவற்றின் அறிவும் முயற்சியும் ஏற்றத்தாழ்வாகவே யிருக்கும். உண்ணல் உறங்கல் மருவல் சாதல் எல்லாவற்றிற்கும் பொதுவாயிருப்பினும் விலங்கினங்களில் இழிந்த பன்றியும் மக்களில் அறிவுடையான் ஒருவனும் ஒப்பாவார் என எவரேனுங் கூறுவரோ? மக்களில் அறிவுடையான் ஒருவனும் அறிவிலான் ஒருவனும் அங்ஙனமே உண்ணல் உறங்கல் முதலான தொழிலளவில் வேறுபாடில்லாதவர்போற் காணப்படினும், அறிவுடையான் தனக்குள்ள அறிவின் சிறுமையால் தாழ்ந்தோனாதலும் எல்லார்க்கும் உடன்பாடேயாகும்.
அஃது உண்மையேயென்றாலும், உலக நூற்கல்வியியால் விளங்கும் அறிவுகொண்டு இம்மையில் எல்லா நலங்களும் பெறுவதாயிருக்க, இதற்கு மேலும் அறிவு நூற்கல்வி ஒன்று வேண்டுமென்பது எதன்பொருட்டோவெனின், உலக நூற்கல்வி ஒன்றேகொண்டு இம்மையிலும் மிகச் சிறந்த நலங்களைப் பெறுதல் இயலாது; இப்பிறப்பிற் பெறுதற்கரிய இன்பங்களையும் அறிவுநூற்கல்வியுடையார் எளிதிற் பெறுவர். கண்ணாற்கண்டுஞ் செவியாற் கேட்டும் வாயாற் சுவைத்தும் மூக்கால் முகந்தும் மெய்யால் தொட்டும் ஐம்பொறிகளால் துய்க்கும் இன்பங்களிலும்கூட அறிவுநூற்கல்வியால் உயர்ந்த அறிவு வாய்த்தவனுக்கு வரும் இன்பம், ஏனை உலகநூற் கல்விமட்டும் பெற்றவனுக்குத் தோன்றாது. மிக்க் கூரிய முனையையுடைய ஓர் இருப்புக்கோல் ஆழ்ந்த்தோர் இடத்தையுந் துளைத்துச் செல்லும்; முனை மழுங்கியதோ அதைப்போல ஆழ்ந்து செல்ல மாட்டாதாகும். உலகநூற்கல்வி சிறிது அறிவை விளக்குமேனும், அதனாற் செய்யப்படும் உலக முயற்சிகள் பலவும் மக்களுக்குப் பலவகைக் கவலைகளையுந் துன்பங்களையும் விளைவித்து அவரது அறிவை அலுப்படையச் செய்து மழுக்கு மாதலின் அவர் ஐம்பொறி இன்பங்களையுங்கூடக் கூர்ந்து பார்த்துத் துய்க்க மாட்டார். அறிவுநூற்கல்வி யுடையார்க்கு நிகழும் அறிவும் முயற்சியம் அத்தகைய அல்லல்களை வருவியாமல் மேன்மேல் உள்ளக் கிளர்ச்சியினைத் தருவனவாய் இருத்தலின், அவரது அறிவு பெருவிளக்கம் உடையதாய், அவர் துய்க்கும் எவ்வகை யின்பங்களையும் மிகவுங் கூர்மையாய்த் துய்த்தற்குரிய வழிதுறைகளைக் காட்டி அவரை எக்காலும் பெருமகிழ்ச்சியில் தோய்ந்திருக்கச்செய்யும். இனிய ஓசையையேனும் அழகிய காட்சிகளையேனுந் தீஞ்சுவை உணவையேனும் நலஞ்சிறந்த வேறு பிறவற்றையேனும் இவ் விருதிறத்தாரும் ஒருகாலத்து ஒருங்கே துய்க்கும்போது, அறிவுநூற்கல்வி யுடையார் அவற்றின் நுணுக்கங்களை நிரம்பத் தெரிந்து மிக மகிழ்தலும், உலகநூற்கல்வியுடையார் அவற்றை அங்ஙனம் உணரமாட்டாமையின் அவர் சிறிதே மகிழ்தலுங் கண்கூடாய்க் கண்டறியலாம்.
மேலும், அறிவுநூற்கல்வி யுடையார் பெரிதுங் கூர்மையான அறிவுடையராதலின், அவர் தாம் விரும்பினால் தம்மினுந் தாழ்ந்த உலகநூற்கல்வி யுடையார் செய்யும் எத்திற முயற்சிகளையும் அவரைவிட எளிதாகவுஞ் செவ்விதாகவுஞ் செய்து முடிக்கமாட்டுவர். உலகநூற் கல்வி யுடையாரோ தாம் எத்துதணதான் விரும்பினாலும் , தம்மினும் மேற்பட்ட அறிவுநூற்கல்வியார்க்குள்ள அறிவைப் பெறவாவது அவர் செய்யும் முயற்சிகளிற் றினையளவேனுந் தாஞ் செய்யவாவது மாட்டுவாரல்லர்; எதுபோல வெனின், அரசியலை திறம்பட நடத்தும் மேலோனான ஓர் அமைச்சன் தன்கீழ் அலுவல் பார்ப்பார் செய்யும் முயற்சிகளைத் தான் செய்யவேண்டினால் அவரினும் அதனைத் திறமையாக செய்து முடிப்பன்; அவன் கீழுள்ள ஊர்காவற்காரன் ஒருவன் அவ் வமைச்சன் தொழிலைத் தான் செய்ய விரும்பினால் அது முடியுமோ? அதுபோலவென ற்றிந்துகொள்ளல் வேண்டும். அதுவல்லாமலும், எல்லா உயர்ந்த பொருள்களும், உயர்ந்தோரும், உயர்ந்த இனப்ங்களுந் தமக்கு இசையாத உலகநூலறிவி முயற்சியுடையாரை விட்டகன்று, தமக்கு இசைந்த அறிவுநூலறிவு முயற்சியுடையாரைத் தாமே வந்து அணுகுமாதலின் அறிவுநூற் கலைஞரே இம்மையிலும் எல்லா உயர்ந்த நலங்களையும் பெறுவர், மறுமையிலும் ஏனையோர்க்கு எட்டாத பேரின்பத்தைப் பெறுவர். ஆதலால், மக்களாய்ப் பிறந்தோர் உலகநூற்கல்வியிலேயே தமது காலத்தை முற்றுங் கழித்துவிடாது அறிவுநூற் கல்வியையும் மிக முயன்று பெற்றுப் போரறிவையும் பெரு நலங்களையும் எய்துவாராக! அவிறநூல் உலகநூல் இவ்விவை என்பதைப் பின்னர் விளக்கிக்காட்டுதும்.
8, உற்றுநோக்கி ஆராய்தல்
மற்று நியூட்டன் என்னும் பேராசிரியரோ இவ்வுலகியற் பொருட்டன்மைகளை எந்நேரமும் உற்றுநோக்கிய படியாகவும், உற்றுநோக்கி யாராய்ந்த் படியாகவுமே தமது அரிய வாழ்நாளை எந்நேரமும் பயன்படுத்திவந்தார். ஒருகால் அவர் ஓர் இலந்தை அரத்தினடியில் அமர்ந்திருக்கையில், அதில் நன்றாய்ப் பழுத்திருந்த ஒரு பழங்கம்பு கழன்று அவரது காலணடையிற் கீழ் விழுந்த்து. அதனைக் கண்ட அவர், உடனே, அஃதேன் அங்ஙனங் கீழ்விழலாயிற்று என ஆராயப்புகுந்தார். அந்நிகழ்ச்சியினைப் புல்லியதென்று விலக்கிவிடாமல், அல்லும் பகலும் அவர் அதனைப் பலவாற்றான் ஆராய்ந்து பார்க்க, மேலுள்ள பருப்பொருள்களைக் கீழே தன்கண் இழுத்துக்கொள்ளும் ஒர் ஆற்றல் இந் நிலவுலகத்திற்கு உண்டென்றும் அரும்பேருண்மையினை அவர் கண்டு கொண்டார். இந் நிலவுலகமாகிய பருப்பொருளுக்கு உள்ள இவ் விழுக்குமாற்றலை அவர் கண்டறிந்த பிறகுதான், வான்வெளியிற் பந்துகள்போற் சுழலா நின்ற ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலான ஏழு உலகங்களும், அவற்றோடொத்த அளவிடப்படாத எண்ணிறநத் வான்மீன் மண்டிலங்களுந் தத்தம் பருமனுக்குத் தக்க தொலைவில் நினறு ஒன்றையொன்று இழுத்தபடியாய் ஒன்றையொன்று சுற்றிச்செல்லும் வியப்பான உண்மை நிகழ்ச்சினையும் இன்னும் இதுபோன்ற வேறு பல புதுமைகளையும் கண்டு வெளியிட்டார்.
இப் பேராசிரியரது அறிவுவரலாற்றை யெண்ணிப் பார்க்குங்காற், பகுத்தறிவொடு கூடாத கட்பார்வை பயன் இலாதநிலை உணர்கின்றனம் அல்லமோ? மக்களெல்லாருங் கண்ணினாற் பொருள்களையும் பொருள நிகழ்ச்சிகளையும் பார்த்துண்டாகிய ஓரளவான பகுத்தறிவு கொணடே வாழ்க்கை செலுத்தி வருகின்னரென்பது உண்மையே. என்றாலும், ஒரு பொருட்டன்மை மற்றொன்றின் வேறாதலும், அன்றி ஒன்று மற்றொன்னற ஒத்திருத்தலும், அவ்வாறெல்லாம் அமைந்த அமைப்புகளின் கீழ் அவை தம்மை யமைத்த முதற்பேரறிவு ஒன்று மிளிரும்பான்மையும் எல்ங் கருத்து ஒருங்கி ஆராய்ந்து பார்ப்பவர் அம்மக்களுள் எத்தனைபேர் உளர்? ஒரேயொரு காலங்களில் ஒரேயொருவரே மிக அரியராய் ஆங்காங்குக் காணப்படுகின்றனர். ஒரு கயிற்றிறிகட்டித் தொங்கவிடப் பட்டிருக்கும் ஓர் எடைகல் அங்கும் இங்குமாய் ஊசலாடுவதை எத்தனை யாயிரக்கணக்கான மக்கள் முன்னும் பின்னும் பார்த்திருக்கவேண்டும்! அதலிருந்து நாழிகை யறிவிக்குங் கடிகாரக் கருவியினை யமைக்கும் நுண்ணறிவு கலிலீயோ என்னும் வான்நூலாசிரியர்க்கன்றி வேறெவர்க்கேனுந் தோன்றியதுண்டோ? இல்லையே!
பின்னும் ஒருகால் அவ் வான் நூலாசிரியர் தெமாலைவுநோக்கி என்னும் ஒரு வியத்தகு கண்ணாடியினை அமைக்கும் முறை கண்டிறிந்தும் மிகவும் வியக்கற் பாலதாயிருக்கின்றது. மூக்குக்கண்ணாடி செய்யும் ஒருவர், தொலைவிலுள்ள பொருள்களைக் கட்புலனுக்கு அருகே காட்டுத் ஓர் அரிய கருவியினை அமைத்து அதனை ஒரு செல்வர்க்கு வழங்கிய செய்தியைக், கலிலுயோ என்னும் அப் பேரறிஞர் ஒருநாள் தற்செயலாய்க் கேள்வியுற்றார். கேட்ட அந்நாள் முதல் அவர் அங்ஙனந் தொலைவிலுள்ளவைகளை அருகிற் காட்டுங் கருவியின் அமைப்பைத் தொடர்பாக ஆராய்ந்து செய்து செய்து பாரத்துக், கடைசியாகத் ‘தொலைவுநோக்கி‘ Telescope என்னும் புதுமையான கருவியை அமைத்து முடித்தார். அக் கருவியானது அமைக்கப்பட்ட பிறகு தான், எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள ஞாயிறு திங்கள முதலான உலகங்களின் இயல்புகளையும், அவை தமக்கும் எட்டாத் தொலைவிலுள்ள ஏனை வான்மீன் மண்டிலங்களின் இயல்புகளையும், எல்லாம் அவரும் அவர் வழிவந்த மற்றைவான் நூலாசிரியர்களும் நன்கறிந்து கண்டு நம்போல்வார்க் கெல்லாம் அவ்வுண்மைகளை நன்கு விளக்கி வருகின்றனர். கலிலீயோ என்னும் அவ்வறிஞர் பெருமானுக்கு அத்துணை விழிப்பான் கருத்தும் ஓயாத ஆராய்ச்சியறிவும் ஆராய்ந்தவைகளைச் செய்துமுடிக்கும் விடாமுயற்சியும் இல்லாதிருந்தார், நாம் அம் மேலுலகஙக்ளின் உண்மைகளை உணர்ந்துகொளல் இயலுமோ? அவ்வுண்மைகளை யறியாமல் அவ்வுலகங்களைப் பற்றிய வெறுங் குருட்டு நம்பிக்கைகளிலும் பொய்க்கதைகளிலுமன்றோ நம் வாழ்நாளை நாம் விலங்கினங்களைப்போற் கழிக்க வேண்டும்?
இன்னும் பாருங்கள்! “கூவல் ஆமை குரை கடல் ஆமையைப்“ பார்த்துப் பழித்த்துபோலத், தாம் இருக்கும் நாட்டையும் அந் நாட்டிலுள்ள மக்களையுந் தவிர வேற்று நாடுகளையும் அந் நாடுகளில் உள்ள மக்களையும் பற்றிச் சிறிதுமே உண்மை தெரியாமல் அந் நாடுகளையும் அம் மக்களையும் இழித்துப்பேசுவோர் நம்மில் நூறாயிரக் கணக்காய் இருக்கின்றனர்! ஓர் ஊரை விட்டு வேறு ஓர் ஊர்ச்சென்று அதன் இயல்புகளையும் அங்குள்ள உயிர்களின் இயல்புகளையும் நன்குணர்ந்து அதன்கண் வாழ்க்கை செலுத்த விரும்புவார் நம்மில் மிகச் சிலராகவே காணப்படுகின்றனர். தாமிருக்கும் ஊரில் தாம் உயிர்வாழ்வதற்கு வேணடுங் கருவிகள் கிடைக்கப்பெறாமல் வறுமைப்பட்டுத் துன்புறுவோரே அயல்நாடுகள் சென்று குடியேறக் காண்கின்றோம். இவ்வாறாக நம்மனோர் பெரும்பாலுந் தாமிருக்கும் இடத்தை விட்டுப் பெயராத சோம்பர்களையும், உலகத்தின் பல பகுதிகளையுங் கண்டு அறிவை அகலமாக்கும் விரிந்த நோக்கம் இல்லாதவர்களாயும் இருத்தலறிந்தே நம் பண்டை ஆசிரியர்கள் இந்திய இலங்கை நாடுகள் எங்குங் கடவுளை வணங்குதற்கென்று ஊரவர் வேறு ஊர் சென்று அன்பிலும் அறிவிலும் விரிந்த நோக்கத்திலும் மேன்மேற் பெருகுதற்கு வழிசெய்து வைத்தனர். வைத்துங், கடற்கப்பால் உள்ள நாடுகளுக்குக் கப்பலேறிச் சென்று ஆங்காங்குக் குடியேறக் கருதும் மனத்திட்பம் உடையார் நம்மில் இன்னும் மிகச் சிலராகவே இருக்கின்றனர். கப்பலேறிச் சென்றாற் கடலுக்கு இரையாவோம் என்னும் அச்சம் அவர்கள் உள்ளத்திற் குடிகொண்டிருக்கின்றது! அதுவேயுமன்றிக், கப்பரேறிச் செல்வாரைத் தமது சாதிக்குட் சேர்க்கலாகாது என்னுங் கட்டுபாடுஞ் சில வகுப்பிற் நீர்வளம் பொருள்வளம் நிரம்பிய பெரிய பெரிய நாடுகளிற் சென்று குடியேறி இனிது உயிர்வாழும் பெம்பேற்றையும் உரிமையையும் இழந்து, நம் இந்து மக்களிற் பெரும்பாலார் சிறிய சிறிய வெற்றூர்களிலிருந்து மிடிப்பட்ட குறுவாழ்க்கை செலுத்துகின்றனர்!
ஆனால், மேல்நாட்டவரான வெள்ளைக்கார நன்மக்களோ தாம் பிறந்த ஊர்களில் இருக்குமளவில் மனவமைதிபெறாத பெரு நோக்கமும் பேரறிவும் பெரு முயற்சியும் பேரூக்கமும் அஞ்சா ஆண்மையும் வாய்ந்தவர்களாய் இந் நிலவுலகமெங்கும் உள்ள பெருநிலப்ப்ப்புகளை யெல்லாங் கடல்தாண்டிக் கண்டு கைக்கொண்டு அவை தம்மையெல்லாந் தமக்கு நீங்கா உரிமைகளாக்கி இன்ப வாழ்க்கை செலுத்தி வருகின்றனர். இவர்கள் இவ்வாறு இந் நிலவுலகமெங்கும் பரவி இனிது வாழ்தற்கு, இவர்கள் முன்னோரிற் சிலர் அறிவும் ஆராய்ச்சியும் எதனையும் உற்றுநோக்கி யெண்ணுதலும் அஞ்சா மன உறுதியும் விடா முயற்சியும் வாய்ந்திருந்தமையே காரணமாகும். தாமிருக்கும் ஊரையும் அதற்கு அருகாமையிலுள்ள வேறு சில ஊர்களையுமன்றிச் சேர்மையிலுள்ளவைகளைச் சிறிதும் அறியாதவர்களாய் நம் இந்துமக்கள் மிடிபட்ட வாழ்க்கையில் இருக்க, மேல்நாட்டவர்களின் முன்னோர்களில் ஒருவரான கொலம்பசு எனப்வரோ தாமிருந்த ஸ்பெயின் தேயத்தையடுத்த பெரும்புறக் கடலுக்கும் அப்பால் ஒரு பெருந்தேயம் உளதென்றறிந்து, மூவாயிரத்தைந் நூறு மைலுக்கு மேல் அதனைக் கடந்து சென்று, கி,பி, 1492 ஆம் ஆண்டில் அமெரிக்கா தேயத்தைக் கண்டுபிடித்தார். அப் பெரும்புறக் கடலுக்கும் அப்பால் ஒரு பெருந்தேயம் உண்டென்பதைக் கண்ட அவரது ஆராய்ச்சி யறிவின் தெய்வத்தன்மையை என்னென்றுரைப்போம்! அதன் உண்மையை ஆராய்ந்துகண்ட அளவில் இராமல், தம் நாட்டு அரசற்கும் அரசிக்கும் அதனை மெய்ப்படுத்திக்காட்டி, மூன்று மரக்கலன்களும் நூற்றிருபஃது ஆட்களுந் தாம் அக் கடல் கடந்து செல்லுதற்கு உதவியாகத் தம் அரசற்பாற் பெற்றுக் கொண்டு, முன் எவருமே சென்ற்றியாத அப் பேராழியில் வழிகண்டு சென்ற அவர்தம் அறிவாற்றலையும் அஞ்சா ஆண்மையினையும் எண்ணுந்தோறும் எம் நெஞ்சம் அளவிலடங்கா இறும்பூதுந் திகைப்பும் அடைகின்றது!
இங்ஙனம் அப்பெரும்பௌவங் கடந்துசென்ற கொலம்பசுப் பெரியாரின் பேரறிவின் திறம், அவர்தாம் மேற்கொண்டு சென்ற அவ்வருஞ்செயலை எவ்வாறு பயன்பெறச் செய்த்தென்பதும் நினைவுகூரற்பாற்று. பிறர்க்கு வழிதிசை தெரியாப் பெருவெள்ளக் காடான அப் பேராழியினூடே அவர் எவ்வாறு வழிதெரிந்து சென்றார் என்பதை நினைந்தால் எவர்க்குத்தான் வியப்பெழாது! எவர்க்குத்தான் நெஞ்சந் திகில் கொளாது! இவ்வளவு தெரிந்து சென்றதே ஒரு தெய்வத்தன்மை! இதனினுஞ் சிறந்த ஒரு தெய்வ அறிவும் இவரை அந் நடுக்கடலிற் காப்பாற்றியது. இவ ஐந்து கிழமைகளாக அல்லது முப்பத்ரதைந்து நாட்களாக அப் பெருநீரில் அம் மூன்று கப்பல்களையுங் கொண்டு செல்கின்றார். வழிதுறை யொன்றுந் தெரியவில்லை! நாற்புறமுஞ் சூழ ஒரே வெள்ளக்காடு! தேடிச் செல்லும் தேயஞ் சிறிதுந் தென்படவில்லை! அம்மூன்று மரக்கலங்களும் அவருக்கு உதவியாய்ச் சென்ற ஆட்களெல்லாரும் இனி நிலத்தைக் காண்போமோ என்று ஏங்கி நம்பிக்கையிழந்தார்கள்! தம்மை அப் பெருந்தீவுக்கு இரையாக்கவே அவர் கொணர்ந்தாரென எண்ணி, எல்லாரும் அவரைத் துன்புறுத்த தொடங்கிவிட்டனர்!
அந்நேரத்தில், எல்லை சிறிதுந் தெரியாத அப்பெருநீர்ப்பரப்பில், தமக்கு உதவியாய் வந்த துணைவர்களே நம்பிக்கையற்று மனங்கலங்கித் தம்மைத் துன்புறுத்துவராயின் அப்போது எத்தகைய நெஞ்சழுத்தம் உடையாருந் தந்நெஞ்சந் தடுமாறாதிருத்தல் ஏலுமோ? ஏலாதே; ஆனாலுங், கொலம்பசுப் பெரியார் அந்நேரத்திலும் உள்ளஞ் சிறிதுந் தடுமாறிற்றிலர்! தமது கப்ப்லுக்க்ருகே கடற்பாசிகள் மிதந்து செல்வதை அவர் உன்னிப்பாய்ப் பார்த்து, “இதோ! நாம் தேடிச்செல்லுந் தேயம் அண்மையில் வந்துவிட்டது. அஞ்சாதீர்கள்“! என்று அவர்கள் எல்லார்க்கும் ஆறுதல் மொழிந்தார். அவர் மொழிந்தவண்ணமே சில நாட்கள் அமெரிக்கா தேயக்கரை அம் மரக்கலங்களிற் சென்றாரெல்லார் கண்களுக்கும் புலப்படலாயிற்று! அப்பெரு நீர்ப்பரவையில் ஆழாது தப்பிய அவரெல்லாம் உவகைக் கடலுள் ஆழ்ந்தனர்! அமெர்க்காக் கரையோரங்களில் உள்ள மலைப்பாறைகளில் ஒட்டி வளர்ந்த கடற்பாசி மிதந்து வருதலைக் கண்டு, அத்தேயத்தின் அருகே தாம் வந்துவிட்டதைக் கொலம்பசுப் பெரியார் அறிந்த அறிவு, அவருடன் சென்ற ஏனைமக்கட்கு இல்லாது போயிற்றே! இதனால், எத்துணைச் சிறிய, எளிய, புல்லிய பொருளையும் புறக்கணித்து விடாமல், அதனையும் அதன் றொடர்பையும் உற்றுநோக்கி யாராயும் அறிவுடையாரே எல்லா வகையிலுஞ் சிறந்தவராவர் என்றறிதல் வேண்டும்.
“அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்“.
9, கல்வியும் ஓய்வும்
வறுமை
“வறுமையானது தகாத செயல்களைச் செய்யும்படி மக்களை ஏவுகின்றது; ஆயினும், நேர்மையுள்ளவர்கள் அத்தகைய செயல்களைச் செய்தல் ஆகாது. வறுமை வநத் காலத்திலேதான் அவர்கள தமது மனநிலையை உரப்படுத்துதல் வேண்டும். ஒருவன் பசிந்து வருந்தினாலும் பிறரைச் சார்ந்து பிழைத்தல் தக்கதன்று.
வாழ்க்கையே நாடகம்
“நமது உயிர்வாழ்க்கை முழுதும் ஒரு நாடகமே எனக் கருதுகின்றேன். அதில் ஒவ்வொருவனுந் தன்னை மறந்து பிறனொருவனைப்போல் நடக்கப் பாடுபடுகின்றான். நாம் நம்முடைய உண்மை நிலைக்குத் திருமப்மாட்டாதவர்களாய்ப் பிறரைப் பார்த்து அவர்களைப்போல் நடப்பதிலேயே உறைத்து நிற்கின்றோம். இஃது எதனை ஒத்திருக்கின்றதென்றால். இளஞ்சிறார் தெற்றுவாய் உடைய சிலரைப் பார்த்து, அவரைப்போல் தாமுந் தெற்றித்தெற்றிப் பேசுதலையே ஒத்திருக்கின்றது. அங்ஙனம் அச்சிறுவர் தெற்றித்தெறி நெடுகப் பேசிவரவே, சிறிது காலத்தில் அவர்களுந்தெற்றுவாய் உடையராகின்றனர். முதலிற் பழகிய அத்தீய பழக்கம் பின்னர் எக்காலும் மறக்கப்படாத வேறோர் இயற்கையாய் விடுகின்றது“ என்ற நாடக நூலாசியர்ரொருவர் (Ben Jonson) அறிவுரை புகல்கின்றார்.
********************
This file was last updated on 20 July 2013
.